அரியலூர்/ தஞ்சாவூர், செப்.11- அரியலூர் மாவட்டம் தூத்தூர் காவல்நிலைய எல்கைக்குட்பட்ட கொள்ளிடம் ஆற்றில் பரிசல் கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த 30 பேரும் பத்திரமாக கரை சேர்ந்தனர். அரியலூர் மாவட்டம் தூத்தூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்டது மேலராமநல்லூர், கீழ ராமநல்லூர் கிராமங்கள். இந்த கிராமங்களைச் சுற்றி கொள்ளிடம் ஆறு ஓடுகிறது. இதனால் இந்த கிராமங்கள் தீவு போல காட்சியளிக்கும். இந்தக் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பொருட்கள் வாங்குவது உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் பரிசல் மூலம் கொள்ளிடம் ஆற்றைக் கடந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் மேலராமநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பொருட்கள் வாங்குவதற்காக தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள குடிகாடு என்ற இடத்திற்கு சென்றுவிட்டு புதன் மாலை 5.30 மணியளவில் பரிசலில் மேலராமநல்லூர் திரும்பிக் கொண்டிருந்துள்ளனர். பரிசலில் பள்ளிமாணவிகளும் இருந்தனர். அப்போது திடீரென பரிசல் கொள்ளிடம் ஆற்றில் கவிழ்ந்தது. இதில் 20 பேருக்கு நீச்சல் தெரிந்ததால் நீந்தி கரை சேர்ந்தனர். மற்ற 10 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. (ந.நி)