நீதிமன்றம் பல முறை இடித்து காட்டியும் எடப்பாடி அரசாங்கம் உள்ளாட்சி தேர்தல்களை நடத்தவில்லை. தோல்வி பயம்தான் காரணம் என்பது ஊரறிந்த இரகசியம். ஆனால் மக்கள் தேர்ந்தெடுத்த உறுப்பினர்கள் இல்லாததால் உள்ளாட்சி அமைப்புகள் எப்படி திணறுகின்றன என்பதை தலைமை தணிக்கையாளர் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இது ஒரு சிறிய சாம்பிள்தான்! இதுதான் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் நிலைமை!
பாதாள சாக்கடை திட்டங்கள் அதற்குரிய நேரத்தில் பூர்த்தி அடையாததால் தமிழக அரசாங்கம் ரூ37 கோடியை இழந்தது.
கடன் மற்றும் ஒதுக்கீடு விகிதாச்சரத்தை பராமரிக்காத காரணத்தால் ரூ.58 கோடி சுமை.
2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டங்கள் கூட இன்னும் பூர்த்தி ஆகாமல் உள்ளன.
பல நகரங்களில் முறையான சுற்றுச்சூழல் மற்றும் ஏனைய அனுமதிகள் இல்லாமல் பாதாள சாக்கடை திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக கடும் தாமதம்.
பல ஊராட்சிகள் தமது சொந்த ஊரணிகளை செப்பனிடுவதற்கு பதிலாக பொது பணித்துறை ஊரணிகளை கவனித்தனர். (இது கொள்ளை அடிப்பதற்கு ஒரு வழி! பொதுப்பணித்துறை எடப்பாடி வசம் உள்ளது என்பது கவனிக்கத்தக்கது)
கோவை மாநகராட்சியில் தேவையான வட்டி வாங்காததன் மூலம் ஒப்பந்ததாரர்களுக்கு ரூ. 1.52 கோடி சலுகை செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சியில் “பணி பூர்த்தி வங்கி உத்தரவாதம்” பெறாததால் ரூ 1 கோடி இழப்பு.
தேனி மாநகராட்சியில் சொத்து வரி சலுகை சிலருக்கு அளித்ததால் 51 லட்சம் இழப்பு.
திருப்பூர் மாநகராட்சியில் சரியாக ஆய்வு செய்யாமல் நடை பாலங்கள் திட்டமிட்டதால் 2.11 கோடி இழப்பு.
சாலை பராமரிப்பில் விதி மீறல் காரணமாக ரூ. 4.20 கோடி கூடுதல் செலவு.
1 கி.மீ.க்கும் குறைவான சாலை பணியை தனி ஒரு ஒப்பந்ததாரருக்கு தரக்கூடாது எனும் விதிமீறல்- ரூ.2.62 கோடி முறைகேடு. (இப்படி திண்டுக்கல்-2/தஞ்சை-8/விழுப்புரம் 23 என மொத்தம் 32 சாலைகள் விதியை மீறி போடப்பட்டன)
திருச்சி மாநகராட்சியில் டெண்டர் விதி மீறல் காரணமாக நட்டம் ரூ.1.58 கோடி
திருநெல்வேலி மாநகராட்சி
1994ம் ஆண்டே உருவாக்கப்பட்டும் இது வரை மாநகரத்திற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்படவில்லை.
ஒரு நபருக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும் எனும் இலக்கு பெருமளவு நிறைவேற்றப்படாமல் உள்ளது.
பாதாள சாக்கடை திட்டம் முழுமை அடையாததால் தாமிரபரணியில் கழிவு நீர் செல்கிறது. ஆறு அசுத்தம் அடைகிறது.
803 பதவிகள் காலியாக உள்ளன. இதன் காரணமாக பல பணிகள் நடைபெறவில்லை.
வாயு அடிப்படையில் செயல்படும் தகனம் 8 ஆண்டுகளாக முறையான அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருகிறது.
32% வரிதான் வசூல் செய்யப்பட்டுள்ளது.
மாநகர ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுமார் 4000 காலாவதியான மாத்திரைகள் நோயாளிகளுக்கு தரப்பட்டன.
இப்படி பல முறைகேடுகளையும் ஊழல்களையும் தலைமை தணிக்கையாளர் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ஊராட்சி தேர்தல்களை நடத்தாமல் கொள்ளை ஒன்றையே குறியாக செயல்பட்டுள்ளது எடப்பாடி அரசாங்கம்.உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தவும் கீழ்மட்ட ஜனநாயகத்தை உத்தரவாதப்படுத்தவும் எடுபிடி எடப்பாடி அரசாங்கமும் மோடி அரசாங்கமும் தூக்கி எறியப்பட வேண்டும்.
விவரங்கள் தலைமை தணிக்கையாளர் அறிக்கை 1/2018
அ.அன்வர் உசேன்