tamilnadu

img

வலதுசாரி திருப்பத்தை சரிசெய்ய இடதுசாரி திருப்பம்

மாநில உரிமை கருத்தரங்கில் சீத்தாராம் யெச்சூரி அறைகூவல்

புதுச்சேரி செப். 26-  “இந்தியாவில் தற்போது நிகழும் வலதுசாரி திருப்பத்தை சரி செய்ய வேண்டு மானால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இடது சாரி திருப்பத்தை உருவாக்கிட வேண்டும்" என புதுவையில் நடைபெற்ற மாநில உரிமைகளும் மக்கள் விரோத மசோதாக்களும் என்ற சிறப்புக் கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி அழைப்பு விடுத்தார். கட்சியின் புதுச்சேரி பிரதேசக்குழு சார்பில் கம்பன் கலையரங்கில் புதனன்று (செப்டம்பர் 25)  மாலை நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றும் போது இவ்வாறு அவர் கூறினார். அவரது உரை வருமாறு:  புதுச்சேரியின் பாரம்பரியம் மிகச் சிறப்பா னது. வெள்ளை அரசிடமிருந்து பாரதிக்குப் பாது காப்பு அளித்த மண் புதுவை. இந்திய விடுதலை க்குப்பின் பிரான்சிடமிருந்து விடுதலை பெற ஏழு ஆண்டுகள் நடத்தப்பட்ட போராட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் பெரும் பங்கு உள்ளது. பல மொழி, கலாச்சாரம், பண்பாடு கொண்ட வேற்றுமையில் ஒற்றுமை என்பதன் உதாரண மான புதுச்சேரியின் மாண்பிற்கு எதிராக மோடி யின் ஆட்சி உள்ளது. 

பிளவுபடுத்துகிற சித்தாந்தத்தில் ஒற்றுமை

இந்திய மக்களைப் பற்றிக் கவலைப்படாத மோடி அமெரிக்காவிற்குச் சென்று  டிரம்ப்பிற் காக பிரச்சாரம் செய்கிறார். இருவருக்கும் மக்க ளைப் பிளவுபடுத்துகிற, பிரித்தாளுகிற, வெறு ப்பு அரசியலை விதைக்கும் சித்தாந்தம்தான் ஒற்றுமை. மோடி 2019 இல் வெற்றி பெற்றபின் இந்தியாவில் அரசியல் சாசனம் உறுதி செய்த அத்தனை அம்சங்களிலும், பொருளாதா ரத்திலும் சீரழிவு உருவாகிறது. தில்லியில் ரூ. 70க்கு ஒரு கிலோ வெங்காயம் விற்கிறது. உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு கிலோ விற்கு ரூ. 2 தான் கிடைக்கிறது. இந்தியாவின் முதல் 25 பணக்காரர்களின் சொத்து ஜிடிபியில் 10  விழுக்காடாகும். அதாவது 300 மில்லியன் யுஎஸ் டாலர். இந்திய மதிப்பில் மூன்று லட்சம் கோடி ரூபாய்களுக்கு மேல். பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகிறார்கள்.

முன்மொழிந்தவர் அம்பேத்கர்

இந்தியாவில் சில மாநிலங்களுக்குச்சிறப்பு அந்தஸ்து தரும் பிரிவு 370. இதன் பிரிவுகள் ஏ, முதல் ஐ வரை உருவாக்கப்பட்டு 12 மாநிலங் களுக்கு உள்ளது. ஆனால் ஜம்மு-காஷ்மீரில் மட்டும் இப்பிரிவு நிறுத்தி வைக்கப்படுகிறது. ஆனால் நீக்கப்பட்டதாக மோடி அரசு திட்ட மிட்டுப் பொய் கூறுகிறது. வேறு மாநிலத்தவர் நிலம் வாங்கும் உரிமை இமாச்சல் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களிலும் கிடையாது.  காஷ்மீர் மட்டும் ஏன் குறி வைக்கப்படுகிறது. அங்குதான் இந்தியாவில் அதிக முஸ்லிம்கள் வசிக்கிறார்கள். மத மோதலை தூண்டத்தான் இந்த நடவடிக்கை. ஆனால் அதிகார துஷ்பிரயோகம், ஜனநாயக விரோத செயல்பாடுகள் மூலம் இவற்றை மறைக்க முயல்கின்றனர்.  பட்டேலுக்கு அடுத்து இந்தியாவை மோடி தான் ஒருங்கிணைத்து இருக்கிறார் என பாஜக வினர் கூறுகின்றனர். ஆனால் 370 ஆவது பிரிவை அரசியல் சாசனத்தில் இணைக்கும் முடிவு நேரு, பட்டேல், ஷேக்அப்துல்லா ஆகிய மூன்று பேர் பங்கேற்ற கூட்டத்தில்தான் எடுக்கப் பட்டு அமலாக்கப்பட்டது. அரசியல் சட்டத்தில் இப்பிரிவைச் சேர்க்க முன்மொழிந்தவர் அம் பேத்கர். 

பயங்கரவாதிகளுக்கு எதிராக...

பயங்கரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தை மோடி நடத்தவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் இங்கு பயங்கரவாதம் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது என்பது தான் உண்மை. மோடி அரசின் நடவடிக்கை களால்தான் பயங்கரவாதம் அதிகரித்ததே தவிர 370-வது பிரிவு காரணமல்ல.  உண்மையில் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடுவது யார்? தன்னுடைய குடும்பத் தில் இரண்டு பேரை பயங்கரவாதிகளுக்கு பறி கொடுத்து,  மூன்று முறை கொலை முயற்சியி லிருந்து தப்பித்து இன்றும் பயங்கரவாதிகளின் செல்வாக்குள்ள மாவட்டமாக விளங்கும் அனந்தநாக் மாவட்டத்திலிருந்து நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட யூசுப்தாரிகாமி போன்ற தோழர்கள்தான் போராடிவருகிறார்கள்.

ஹிட்லர் கால முகாம்கள் போல்

“மறுபுறத்தில் அசாமில் அரசியல் சாசன விரோத செயலாகத் தேசிய மக்கள் தொகை பதி வேடு என்ற பெயரில் 20 லட்சம் மக்களை இந்தி யர்கள் அல்ல என முகாம்களில் அடைந்து வைத்துள்ளனர். இந்த முகாம்கள் `ஹிட்லர் காலத்து முகாம்களைப்போல அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளதால் அந்த மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.  இது முழுக்க, முழுக்க அரசியல் சாசன அடிப்படைக் கோட்பாடுகளை மீறும் செய லாகும். இந்நிலையில் அமித்ஷா “முஸ்லிம், கிறிஸ்துவர் அல்லாத மக்கள் பயப்படத் தேவை யில்லை என்று கூறுகிறார். மேலும் இம்முறை யை இந்தியா முழுவதும் கொண்டுவருவோம் என பாஜக அரசு கூறுகிறது. அடுத்து தேசிய குடி மக்கள் தொகைப் பதிவேடு என்ற ஒன்றை அறி வித்து, 1952இல் இந்தியக் குடிமக்களாக இருந்த வர்களை மட்டுமே சேர்ப்போம் எனக் கூறு கின்றனர். அப்படியானால் என்ன ஆகும்? புதுச் சேரி இந்தியாவோடு 1954 இலும், கோவா 1961ல்தான் இணைந்தன. இங்கெல்லாம் வீடு வீடாக கணக்கெடுத்தால் புதுச்சேரி, கோவா ஆகியவை இந்தியாவோடு இருக்குமா?  மேலும் "ஒரே தேசம் ஒரே கலாச்சாரம், ஒரே தேசம் ஒரே கட்சி, ஒரே தேசம் ஒரே இனம்,  ஒரே தேசம் ஒரே பிரஜை, ஒரே தேசம் ஒரே  தேர்தல் என இவர்கள் கூறுகின்றனர். இந்தியா வின் பன்முகத்தன்மையை நிராகரிப்பதுதான் இவர்களின் நோக்கம். மனித உரிமை, ஜனநாயக உரிமை போன்றவற்றை நசுக்கி இதனை எதிர்ப்பவர்களைத் தேச விரோதி எனக்கூறி எந்த விசாரணையுமின்றி கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். தற்போது பாஜகவுக்கு எதிரான செய்தியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த எட்டுபேர் உத்தரப்பிரதேசத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

பொருளாதாரம் சீரடையாது

அவசரநிலை காலத்தைவிட பாஜகவின் தற்போதைய அடக்குமுறைக்கு எதிரான போராட்டம் மிகக் கடுமையாக இருக்கும். இதில் நாம் வெற்றி பெறாவிட்டால் எதிர்கால இந்தியா பயங்கரமான இந்தியாவாக இருக்கும். ஒரு புறம் கார்ப்பரேட் ஆதரவு, மறுபுறம் வகுப்பு வாத ஆதரவு என்று செயல்படும் மோடி அரசு மக்களின் நெருக்கடி, விவசாய நெருக்கடி கூடுதலாவதைப் பற்றிக் கவலைப்படவில்லை. அவர்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கப்பட வில்லை. சாதாரண மக்களிடம் வாங்கும் சக்தி இல்லை. இதை உருவாக்குவதற்குப் பதிலாகத் திவாலாகும் கட்டுமான நிறுவனங்களுக்கு 70,000  கோடி ரூபாய் நிவாரணமாகவும், ஏற்றுமதி யாளர்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் நிவா ரணமாகவும் கொடுத்தது மோடி அரசு. ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 2 லட்சம் கோடி ரூபாய்களுக்கு மேல் பணக்காரர்களுக்கு இந்த  அரசு உதவியது. ஆனால் இவற்றால் பொருளா தாரம் சீரடையாது. உலகப் பொருளாதார மந்த நிலையால் இது உருவாகிறது. 

இடதுசாரி கட்சிகளின் போராட்ட அறிவிப்பு 

உண்மையில் செய்ய வேண்டியது என்ன? ஏழை மக்களிடம் வாங்கும் சக்தியை ஏற்படுத்த கிராமப்புற வளர்ச்சிக்கான சாலை போடுதல்,  உணவு உற்பத்தி போன்றவற்றிற்கு உதவ வேண்டும். ஆனால் இவற்றைச் செய்யாமல் தனக்கு அள்ளிக் கொடுக்கும் பணக்காரர்களின் நலன்களுக்கு பாஜக பாடுபடுகிறது. இந்தியா வில் தற்போது நிலவும் வலதுசாரி திருப்பத்தைச் சரி செய்திட வேண்டுமானால் இந்திய மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இடதுசாரி திருப்ப த்தை ஏற்படுத்திட வேண்டும். இதற்கான முன்னோட்டம்தான் அக்டோபர் 10 முதல் 17 வரையிலான இடதுசாரி கட்சிகளின் போராட்ட  இயக்கங்கள். இதில் அனைவரும் ஒன்றிணை வோம். நாம் கூறுவது இந்து தேசபக்தி அல்ல. இந்திய தேசபக்தி. இதற்கு புதுச்சேரி மக்கள் ஒத்துழைப்பார்கள் என நான் நம்புகிறேன். இவ்வாறு யெச்சூரி பேசினார்.  அவரது ஆங்கில உரையை சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி தமிழில் மொழி பெயர்த்தார்.

இக்கருத்தரங்கிற்கு புதுச்சேரி பிரதேச செயலாளர் இரா.ராஜாங்கம் தலைமை தாங்கி னார். பிரதேச செயற்குழு உறுப்பினர் சு.ராமச் சந்திரன் வரவேற்றார். கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன், மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மத்தியக்குழு உறுப்பினர் சுதாசுந்தரராமன், பிரதேச மூத்த தலைவர் தா.முருகன் உள்ளிட்டோர் பேசினர். பிரதேச செயற்குழு உறுப்பினர் என்.பிரபுராஜ் நன்றி கூறினார். முன்னதாக புதுவை சப்தர்ஹஷ்மி கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.