tamilnadu

img

தருமபுரி அருகே கார்கள் மோதல்: 4 பேர் பலி

தருமபுரி,ஆக.4- தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே வசித்தவர் திருமூர்த்தி (45). மருந்து கடை உரிமை யாளரான இவருக்கு லதா (41) என்ற மனைவியும், நிதீஷ் அபிநவ் (13) என்ற மகனும், வேதரித்திகா (6)என்ற மகளும் உள்ளனர். லதா எட்டி கொட்டாய் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். விடுமுறை என்பதால் அதியமான்கோட்டை அருகே கொட்டாவூரில் உள்ள உறவினர் அல்லிமுத்து வீட்டிற்கு தனது மனைவி, குழந்தைகள் 2 பேரையும் காரில் அழைத்து வந்தார். பின்னர், தனது குடும்பத்தினரை இரவில் அழைத்துக் கொண்டு காரில் பென்னாகரத்துக்கு புறப்பட்டுள்ளார். அப்போது அவர்களுடன் அல்லி முத்துவின் மகள் அபிநயா கீர்த்தியும் (10)அழைத்துச் சென்றார். இண்டூரில் உள்ள மல்லாபுரம் பகுதி அருகே கார் வந்தபோது எதிரே ஒகேனக்கல்லிலிருந்து தருமபுரியை நோக்கி வந்த மற்றொரு கார் திருமூர்த்தி ஓட்டி வந்த கார் மீது மோதியது. இந்த விபத்தின் இடிபாடுகளில் திருமூர்த்தி, லதா, நிதீஷ் அபிநவ், வேத ரித்திகா, அபிநயா கீர்த்தியும், மற்றொரு காரில் வந்த வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த விவேக் (39), பண்ட அள்ளியைச் சேர்ந்த ரத்தினவேல் (40), புலிக்கரையைச் சேர்ந்த சரவணன்(40), பூகானஅள்ளி பிரகாஷ் (37) ஆகியோர் 9 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பெற்ற திருமூர்த்தி, நிதீஷ் அபிநவ், லதா,அபிநயா கீர்த்தி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். படுகாயமடைந்த மற்ற 5 பேருக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் விபத்தில் இறந்த சம்பவம் குறித்து தகவலறிந்த உறவினர்கள் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு உடனே திரண்டு வந்து அந்த உடல்களை பார்த்து கதறி அழுதனர்.