tamilnadu

img

சிபிஎம் மறைந்த தலைவர் என்.வரதராஜன் துணைவியார் தோழர் ஜெகதாம்பாள் காலமானார்

கே.பாலகிருஷ்ணன்,  தலைவர்கள் அஞ்சலி

திண்டுக்கல்,நவ.16-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த முன்னாள் மாநிலச் செயலாளர் தோழர் என்.வரதராஜன் அவர்களின் மனைவி தோழர் ஜெககுரு என்ற ஜெகதாம்பாள்,சனிக்கிழமை (நவம்பர் 16) இரவு 7.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 84. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மாநிலச் செயலாளருமான தோழர் என்.வரதராஜனின் அயராத மக்கள் பணிக்கு உற்ற துணையாக நின்றவர் ஜெகதாம்பாள்.  அரசுப்பள்ளி ஆசிரியையாக பணியாற்றிய இவர், ஒரு மில் தொழிலாளியாக வாழ்க்கையை துவக்கி படிப்படியாக உழைக்கும் வர்க்க மக்களின் உற்ற தோழனாக, கட்சி ஊழியராக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்ட தோழர் என்.வரதராஜனை காதல் மணம் செய்து கொண்டவர். ஆசிரியர் இயக்கம் நடத்திய பல்வேறு போராட்டங் களில் பங்கேற்றவர். தோழர் என்.வரதராஜன் மறைவுக்குப் பின்னர் ,தனது இறுதி மூச்சு வரை கட்சித் தோழர்களுடன் அன்பான உறவு கொண்டிருந்தவர்.  கடந்த சில காலமாக உடல்நலம் குன்றியிருந்த ஜெகதாம்பாள் திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு காலமானார். இவர்களது குடும்பமே கட்சிக்குடும்பம் ஆகும். வ.கல்யாணசுந்தரம், வ.பாரதி ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். வ.கல்யாணசுந்தரம் கட்சியின் திண்டுக்கல் நகரச் செயலாளராக, மாவட்டச் செயற்குழு உறுப்பினராக செயலாற்றியவர். தற்போது மாவட்டக்குழு உறுப்பினராகவும் சிறுபான்மை மக்கள் நலக்குழு தலைவராகவும் செயலாற்றி வருகிறார். 

கே.பாலகிருஷ்ணன் அஞ்சலி

கட்சியின் திண்டுக்கல் மாவட்டக்குழு அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த ஜெகதாம்பாள் உடலுக்கு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.தங்கவேல், ஏ.லாசர், மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.காமராஜ், கே.பாலபாரதி, சி.பத்மநாபன், எஸ்.கே.பொன்னுத்தாய், மாவட்ட செயலாளர்கள் ஆர்.சச்சிதானந்தம், சி.ராமகிருஷ்ணன், இரா.விஜயராஜன், டி.வெங்கடேசன், செ.முத்துக்கண்ணன், கே.கந்தசாமி, தீக்கதிர் மூத்த ஆசிரியர் வி.பரமேசுவரன், பொறுப்பாசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன், விளம்பர மேலாளர் ஆர்.உமாபதி மற்றும் கட்சியின் மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள், இடைக்குழு செயலாளர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். ஐ.பெரியசாமி அஞ்சலி ஜெகதாம்பாள் உடலுக்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி, மாவட்ட செயலாளர் செந்தில்குமார் எம்எல்ஏ, அதிமுக மாவட்டச் செயலாளர் வி.மருதராஜ், ஆவின் தலைவர் பாரதி முருகன், வேட சந்தூர் முன்னாள் எம்எல்ஏ பழனிசாமி மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் நேரில் அஞ்சலிசெலுத்தினர். 

ஐ.பெரியசாமி அஞ்சலி

ஜெகதாம்பாள் உடலுக்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி, மாவட்ட செயலாளர் செந்தில்குமார் எம்எல்ஏ, அதிமுக மாவட்டச் செயலாளர் வி.மருதராஜ், ஆவின் தலைவர் பாரதி முருகன், வேட சந்தூர் முன்னாள் எம்எல்ஏ பழனிசாமி மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் நேரில் அஞ்சலிசெலுத்தினர். 

மாநிலச் செயற்குழு இரங்கல்

தோழர் ஜெகதாம்பாள் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு ஆழ்ந்த அஞ்சலியையும் இதயப்பூர்வமான இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறது என கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.  தோழர் என்.வரதராஜன்,கட்சியின் அர்ப்பணிப்பு மிக்க ஊழியராக, ஒன்றுபட்ட மதுரை மாவட்டச் செயலாள ராக, மத்தியக்குழு உறுப்பினராக, மாநிலச் செயலாள ராக ஓய்வின்றி பணியாற்றியதன் பின்னணியில் தோழர் ஜெகதாம்பாளின் அர்ப்பணிப்பும் அரவணைப்பும் இருந்தது என்றால் மிகையல்ல என குறிப்பிட்டுள்ள அவர், இறுதி மூச்சு வரை கட்சியுடனான நேசப்பிணைப் போடு அவர் இருந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.  தாயார் ஜெகதாம்பாளை இழந்து வாடும் தோழர்கள் வ.கல்யாணசுந்தரம், வ.பாரதி மற்றும்  குடும்பத்தினருக்கும் திண்டுக்கல் மாவட்டத் தோழர் களுக்கும் மாநிலச் செயற்குழு சார்பில் இதயப்பூர்வமான ஆறுதல்களை தெரிவித்துக்கொள்கிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

ஜி.ராமகிருஷ்ணன், ஏ.கே.பத்மநாபன் இரங்கல்

தோழர் ஜெகதாம்பாள் மறைவுச் செய்தியறிந்து கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்  ஜி.ராமகிருஷ்ணன் ஆழ்ந்த அதிர்ச்சியும் வேதனையும் தெரிவித்தார். தோழர் என்.வரதராஜன் அவர்களின் அர்ப்பணிப்புமிக்க கட்சிப் பணிக்கும் மக்கள் சேவைக்கும் பின்புலமாக இருந்தவர் தோழர் ஜெகதாம்பாள் என  தெரிவித்த அவர், மார்க்சிஸ்ட் கட்சி எனும் குடும்பத்தில் ஒரு மூத்த தாயை இழந்துவிட்டோம் என அஞ்சலி தெரிவித்தார்.   கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் ஏ.கே.பத்மநாபன் உள்ளிட்ட தலைவர்களும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர்.