நகரின் தெருக்களில் காலை 11 மணியளவில் “காய் வாங்கலையோ.. காய்” என்ற குரலும் ஞாயிறானால் “மீனோய்ய்...” என்ற குரலும் வியாபாரத்தின் பொருட்டு நம்மைப் பின்தொடரும் குரல்களாக அறிந்திருக்கிறோம். குழந்தை வாங்கலையோ குழந்தை என்ற குரலை இதுவரை நாம் கேட்டதில்லை. அப்படி ஒரு குரலை கேட்க வேண்டியிருக்குமோ என்ற அச்சம் பரவலாக எழுந்துள்ளது.நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை நடைபெற்றதாக வந்த செய்தி மிகப்பெரும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கிவிட்டது. நாம் வாழும் நம் சமூக அமைப்பு எப்படிப்பட்ட கொடூரத் தன்மையுடன் விளங்குகிறது என்பதை இச்சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.கறுப்புநிறக் குழந்தையும் பெண் குழந்தையும் விற்பனை சந்தையில் கொஞ்சம் குறைவான (ரூ 3லட்சம் 4லட்சம்) விலையைப் பெற்றிருக்கிறார்கள் என்பதும் இவ்வியாபாரத்தில் தெரியவந்துள்ளது.என்ன கொடுமையென்றால் இவ்வியாபாரத்தில் இடைத்தரகர்களும் இருந்திருக்கிறார்கள்... பேரங்களும் நடந்திருக்கின்றன.
30ஆண்டுகளாக நடந்த இந்த குழந்தை வியாபாரம் யாருடைய கண்களுக்கும் தெரியாமல் போனது தான் ஆச்சரியம். அரசு மருத்துவமனையில் செவிலியரின் உதவியாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற ஒருபெண்மணியே முக்கியகுற்றவாளி எனக்கூறி காவல்துறை கைது செய்துள்ளது. அவரைத்தொடர்ந்து அடுத்து இரு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட பரபரப்புகள் ஒரு வழியாக ஓய்ந்தபின் இக்குற்றப் பின்னணி குறித்து அரசுத் தரப்பு அதிகம் அலட்டிக் கொள்ளாமல் வழக்கம் போல் சிபிசிஐடிக்கு உத்தரவிட்டு தன் கடமையை முடித்துக் கொண்டது.ஆனால் இக்குற்றம் அரசியல் அதிகார மட்டத்திற்கு எந்தத் தொடர்பும் இல்லாமலேயே நடந்திருக்குமா? குழந்தையின் போலி பிறப்புச் சான்றிதழ் உட்பட அரசு மருத்துவமனையிலிருந்தும் பிற துறையின் அலுவலகங்களிலிருந்தும் தான் வழங்கப்பட்டிருக்கிறது.இக்குற்றத்தின்மீது புகார் செய்தவர் ஆரம்ப சுகாதார நிலைய இயக்குனர். அரசு அதிகாரியே புகார் செய்து அதன்பேரில் கைது, விசாரணை நடந்திருக்கிறது.இதன் பின்னணி மற்றும் குழந்தை விற்பனை என்ற சமூக அவலம் எங்கிருந்து கிளம்பியது என்பது குறித்த உண்மைகளை கண்டறிய தமிழ்நாடு பாலர் அரங்கத் தலைவர் என்.அமிர்தம், சிபிஎம் நாமக்கல் மாவட்டச் செயலாளர் கந்தசாமி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.தங்கமணி, ஜோதிலட்சுமி கொல்லிமலை ஈசுவர் ஆகியோரோடு பேளூக்குறிச்சி உள்ளிட்ட ஒரு லட்சம் பேர் கூடக்கூடிய புகழ்பெற்ற காய்கனி சந்தையிலிருந்து துவங்கி கடல் மட்டத்திலிருந்து 1200மீட்டர் உயரத்தில் உள்ள 14 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட கொல்லிமலை முழுவதும் பயணித்தோம்.குழந்தையின் தொப்புள்கொடி போல் சந்தேகங்களும் மர்மங்களும் பல முடிச்சுகளோடு கிராமங்களிலும் நகரங்களிலும் கிடந்தன. விற்பனை செய்யப்பட்ட பெரும்பாலான குழந்தைகளின் பிறப்பிடம் கொல்லிமலை என செய்திகள் கூறுகின்றன.சங்ககால இலக்கியத்திலிருந்து இன்றுவரை மூலிகைகளின் பேரரசியாக கொல்லிமலை தான் உள்ளது என்று வரலாறு கூறுகிறது.
சிறுதானிய உற்பத்தியும் இயற்கை விவசாயமும் கொல்லிமலை மக்களின் மரபுவழி பண்பாட்டு கலாச்சாரமும் புகழ்பெற்றதாகவே உள்ளது. ஆனால் வறுமைக்குட்பட்ட மக்கள் தங்களால் இரண்டுகுழந்தைகளுக்குமேல் வளர்க்கமுடியாது என உணர்ந்தாலோ தங்களது உறவினர்களில் குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கோ தாங்களாகவே முன்வந்து தங்கள் குழந்தைகளை தானாமாக கொடுத்து வந்துள்ளார்கள்.இவையாவும் நேர்வரிசையாகவும் எல்லா ஊர்களிலும் தொன்றுதொட்டு நடந்ததாகவும் கூறமுடியாது எனக்கூறிய பெரியவர் ஒருவர் எப்போதோ ஒருசில நிகழ்வுகள் நடந்துள்ளன என்றார்.இச்சம்பவம் குறித்து மலைப்பகுதியிலும் தரைப்பகுதிகளிலும் அச்சத்தின் காரணமாக பேசத் தயங்குகிறார்கள்.14 நாடுகளைக் கொண்ட கொல்லிமலையில் ஒவ்வொரு நாட்டிலும் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. தரைப்பகுதி கிராமங்களைப் போல் தொடர்ச்சியாக மலைப்பகுதியில் ஊர்களை காணமுடியாது. “பிரசவத்திற்காக டவுனுக்கு போனாங்க. குழந்தை பிறந்தவுடன் இறந்துவிட்டதாம். சேதி வந்திச்சி” - இப்படித்தான் தகவல்கள்.அதற்குமேல் அங்கே விசாரணைக்கு ஒன்றுமில்லை. என்ன நடந்தது ஏது நடந்தது என்பது பற்றி அறப்பலீசுவரனுக்கே தெரியும் என்கிறார்” அந்தப் பெரியவர்.அறப்பலீசுவரன் என்பது அங்குள்ள பிரபலமான கோவிலாகும்.மற்றபடி பெண் குழந்தைகளைக் காட்டிலும் ஆண் குழந்தைகளின் மீதே விருப்பம் அதிகம் உள்ளதென்பதையும் காணமுடிந்தது. கொல்லிமலை பூர்வகுடிமக்கள் குழந்தைகள் விற்பனை என்ற ‘வியாபாரத்தை’ அறியாதவர்கள் என்றே உறுதிப்படத் தெரிவிக்கிறார்கள். குழந்தை விற்பனை செய்ததாக கூறப்படும் பெற்றோர்களை சுற்றியே விசாரணை உள்ளது. விலை கொடுத்து வாங்கியவர்கள், அவர்களது பின்னணி, குழந்தையின் பாதுகாப்பு இவையாவும் கேள்விக்குள்ளாக்கப்படாமல் உள்ளது.
ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் 3 மாதங்களிலிருந்தே கருவுற்ற பெண்கள் குறித்த அனைத்து விபரங்களும் பதிவு செய்யப்பட வேண்டும் என்பது அரசின் விதியாகும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவம் நடைபெற்றால்தான் அரசின் நிதி உதவி, நிவாரணங்களும் கிடைக்கும்.இப்படி பல விதிமுறைகள் இருக்கும்போது தரைப்பகுதி மருத்துவமணைக்கு மலைப்பகுதிகளிலிருந்து வரக்காரணம் என்ன?இந்த விவகாரத்தில் சிக்கிய அமுதவல்லி மட்டுமே குற்றவாளியா? சில செவிலியர்களையோ அவர்களின் உதவியாளர்களையோ கைது செய்வதால் பிரச்சனை முடிந்துவிடுமா? வேர்களை அறிவதே முக்கியம்.ஆணாதிக்க சமூக அமைப்பில் ஆண்பிள்ளையை உயர்வாகப் பார்ப்பது சொத்துக்களின் வாரிசாக அவர்களைக் கருதுவது, திருமணமாகி குழந்தை இல்லாதவர்களை இச்சமூக அமைப்பு பார்க்கிற தன்மை அதிலும் பெண்களை மிகக்கேவலமாக வசைபாடுவது, செயற்கை முறையில் கருத்தரிப்பில் பல லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை செலவு செய்து பெண்ணின் உயிரை ஒரு பொருட்டாகக் கருதாமல் பணயம் வைப்பது, குழந்தைப் பேறில்லாத தம்பதியர்களை பணம்கறக்கும் இயந்திரமாக சில மருத்துவமனைகள் கருதுவது தொட்டில் குழந்தை திட்டம்குறித்தோ பெண்குழந்தை திட்டங்கள்குறித்தோ போதிய விழிப்புணர்வு இல்லாதது, அத்திட்டங்களும் விரிவான எண்ணிக்கையில்லாமல் குறிப்பிட்ட இலக்கு வைத்து பெயரளவிற்கு நிதி ஒதுக்குவது, குழந்தைகளை சட்டப்பூர்வமாக தத்தெடுக்கவோ கொடுக்கவோ கூட முடியாத எட்டமுடியாத உயரத்தில் விதிமுறைகளை வைத்திருப்பது, அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தாமல் இருப்பது... இன்னும் இதுபோன்ற காரணங்களை பட்டியலிடலாம்.
இவைகளை மட்டுமே குழந்தை வியாபாரிகள் தங்கள் லாபத்திற்கு மூலதனமாக பயன்படுத்திக் கொண்டார்களா என்ற கேள்விகளும் உள்ளன. தொட்டில் குழந்தை திட்டம் குறித்தெல்லாம் எதுவும் தெரியாது எனக்கூறும் பெண்கள் மலையில் மட்டுமல்ல; தரையிலும் உள்ளார்கள்.குழந்தை விற்பனை குறித்த குற்றப் பின்னணியின் வேர்களை நோக்கிச் சென்றபோது வறுமை மட்டுமல்ல; முதலாளித்துவ சமூக அமைப்பும் உலகமய தாராளமயத்தின் நவீன தந்திரங்களும் நிலம், நீர், குழந்தை என அனைத்தையும் வியாபாரமாக்கிவிட்டது என்பதைப் புரிய வைத்தது.
l குழந்தை விற்பனைக் குற்றத்திற்கு தார்மீகப் பொறுப்பேற்று சுகாதார நலத்துறையின் அமைச்சர் பதவிவிலகவேண்டும்.
l ஆரம்ப சுகாதார நிலையங்கள், அவற்றின் செயல்பாடுகள் குறித்த வெள்ளையறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
l இப்பிரச்சனையில் மனித உரிமை ஆணையம் தலையீடு செய்ய முன்வரவேண்டும்.
l ஏழைகளை மேலும் ஏழைகளாக்கி மலைப் பகுதிகளில் பல சீரழிவுகளை ஏற்படுத்திவரும் டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை உண்மை கண்டறியும்குழு தமிழ்நாடு அரசுக்கு முன்வைத்துள்ளது.அரசு நிறைவேற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
- கே.பாலபாரதி
மாநிலக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)