நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை நெருங்கியுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,461 ஆக உள்ளது. ஒரு நாளைக்கு சுமார் 50,000 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.
இந்தநிலையில், உஸ்மானியா அரசு மருத்துவமனையில் நேற்று காலையில் 9 மணியிலிருந்து 3 மணிக்குள் கொரோனா நோயாளிகள் தங்கவைக்கப்பட்டுள்ள பகுதிக்கு செல்ல வேண்டிய ஆக்ஸிஜன் தடை செய்ய்யப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்காக 100 படுக்கை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த 100 படுக்கைகளுக்கும் 80 ஆக்ஸிஜன் வால்வுகள் மூலம் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில், ஆக்ஸிஜன் இணைப்பு தடைபட்டதன் காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.