சென்னை,பிப்.8- டிஎன்பிஎஸ்சி குரூப்- 2ஏ தேர்வில் முறைகேடாக தேர்ச்சிபெற்று, அரசுப் பணியில் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 மற்றும் குரூப்- 2ஏ தேர்வு முறைகேடுகள் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக 2 அரசு ஊழியர்கள், 2 டி.என்.பி.எஸ்.சி ஊழியர்கள், 2 இடைத்தரகர்கள், 9 தேர்வர்கள் மற்றும் ஒரு தனியார் பார்சல் சர்வீஸ் வாகன ஓட்டுநர் என 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குரூப்-2 ஏ தேர்வு முறைகேடு வழக்கில் இதுவரை 15 அரசு ஊழியர்கள், 3 காவலர்கள், 1 இடைத்தரகர், ஒரு கிராம நிர்வாக அலுவலர் என 20 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். மொத்தம் 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் 2017ஆம் ஆண்டு குரூப்- 2ஏ தேர்வில் முறைகேடாக தேர்ச்சி பெற்று, அரசுப் பணியில் சேர்ந்த புகாரில் கரூர் மற்றும் மயிலாடுதுறையைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் இரண்டு பேர் சனிக்கிழமையன்று கைது செய்யப் பட்டுள்ளனர்.