1929 - தற்போது ஆஸ்கர் என்று அறியப்பட்டுள்ள அகாடமி விருதுகள் வழங்கும் முதல் விழா நடைபெற்றது. திரைப்படத்துறையில் தொழிலாளர்கள் தொடர்பான பிரச்சனைகளை, தொழிற்சங்கங்களின் இடையீடு இன்றி தீர்த்துக்கொள்வதற்கான ஓர் அமைப்பு தேவை என்று படத்தயாரிப்பு நிறுவனமான மெட்ரோ-கோல்ட்வின்-மேயர்(எம்ஜிஎம்)-இன் தலைவர் லூயிஸ் மேயர் கருதினார். 1927 ஜனவரி 27 அன்று இண்டர்நேஷனல் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சைன்சஸ் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, பதிவு செய்யும்போது இண்டர்நேஷனல் என்ற சொல் கைவிடப்பட்டது. இதன் முதல் கவுரவ உறுப்பினராக தாமஸ் ஆல்வா எடிசன் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொழிலாளர் நிர்வாகம், அவற்றுக்கான பேச்சுவார்த்தைகள் ஆகியவற்றைத்தாண்டி, திறமைக்கு விருதுகள் தரவேண்டும் என்ற கருத்து பலராலும் கூறப்பட்டாலும், 1928 ஜூலையில்தான் அது உருப்பெற்று, 12 விருதுகளும், வாக்களிக்கும் முறையும் ஏற்படுத்தப்பட்டன. தனிச்சிறப்பு வாய்ந்த சாதனைக்கான விருது என்ற பெயர்கொண்ட இது, எப்படி ஆஸ்கர் ஆனது என்பதற்கு உறுதியான விளக்கமில்லை. 1929இல் முதல் விருது வழங்கப்பட்டுவிட்டாலும், 1939ல்தான் ஆஸ்கர் என்று அதிகாரப்பூர்வமாகக் குறிப்பிடப்பட்டது. அகாடமியின் தலைவராக இருந்த பெட்டி டேவிஸ், தன் முதல் கணவரான ஹார்மன் ஆஸ்கர் நெல்சனின் பெயரைச் சூட்டியதாக சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார். அகாடமியின் செயலாளராக இருந்த மார்க்கரெட் ஹெர்ரிக், விருதுச்சிலை, ஆஸ்கர் மாமா என்ற பட்டப்பெயர்கொண்ட அவர் உறவினர் ஆஸ்கர் பியர்சைப்போன்று இருப்பதாகக் கூறியதால் இப்பெயர் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஹெர்ரிக் இவ்வாறு அழைத்ததை அறிந்திருந்த எழுத்தாளர் சிட்னி ஸ்கோல்ஸ்கி, 1934இல் ஆறாவது விருதுவிழாவைப்பற்றி எழுதும்போது ஆஸ்கர் விருது என்று குறிப்பிட்டதே முதன்முதலில் ஒரு செய்தித்தாளில் ஆஸ்கர் என்ற பெயர் வெளியான நிகழ்வாகும். ஆஸ்கர் விருதை விற்கக்கூடாது என்ற விதி 1950இல் சேர்க்கப்பட்டது. விற்க விரும்பினால் அகாடமியிடமே ஒரு டாலருக்கு விற்கலாம். இதை ஏற்காதவர்களுக்கு விருது வழங்கப்படுவதில்லை. இந்த விதிக்கு முந்தைய ஓரிரு விருதுகள் பின்னாளில் பல கோடிக்கு விற்கப்பட்டுள்ளன. அறிவுக்கடல்