tamilnadu

img

இடைநிலை வகுப்புகளில் ஏன் பாலியல் கல்வி?

இந்திய நாட்டில் ஐந்தில் ஒரு  பகுதி,  அதாவது  20 சதவிகிதம்  என்ற  கணக்கில்  பதின்  பருவத்து  பிள்ளைகள்  இருப்பதாக  மக்கள்  தொகை  கணக்கெடுப்பின்  ஆய்வு கூறுகிறது.  குழந்தைப்  பருவத்திலிருந்து  இளைஞர்களாக  மாற்றமடையும்,  உடல்  மற்றும்  உளவியல்  சார்ந்த  மாறுதல்களை  உள்ளடக்கிய  வயதின்   படிநிலைகளே   பதின் பருவம்  என்று  யுனிசெப் (UNICEF-United  Nations International  Children’s Emergency  fund)   கூறுகிறது. இந்த பதின் பருவத்தை, மூன்று நிலைகளாக  பிரிக்கின்றனர். 10 முதல் 13 வயதினரை ஆரம்ப கால பதின் பருவத்தினர் என்றும், 14 முதல் 16 வயதினரை இடைநிலை பதின் பருவத்தினர் என்றும், 17 முதல் 19 வயதினரை கடைநிலை பதின் பருவத்தினர் என்று கூறுகின்றன. இடைநிலை பதின் பருவமான 14 வயதின் தொடக்கத்தில் பெரும்பாலான  மாணவர்கள்  ஒன்பதாம் வகுப்பில்  நுழைகின்றனர்.  இடைநிலை பதின் பருவத்து குழந்தைகளுக்கு குறிப்பாக  ஒன்பதாம்  வகுப்பிலிருந்து, மாணவர்களுக்கு  பாலியல்  கல்வி  கற்பிக்க  வேண்டியது  இன்றியமையாதது  என்று  பாலியல்  ஆரோக்கியத்திற்கான  உலக  கூட்டமைப்பு  அறிவுறுத்துகிறது.  அவர்களின்  ஆலோசனையின்  பெயரில்  பெரும்பாலான  வளர்ந்த  மற்றும்  வளரும்  நாடுகள்  பாலியல்  கல்வியை  ஒன்பதாம்  வகுப்பிலிருந்து கட்டாய பாடமாக்கி உள்ளது. 

பாலியல் கல்வி என்றாலே, அது ஆண் பெண் சேர்க்கைப்  பற்றி  மட்டும்  தான்  பேசும்  என்ற  குறுகிய,  அடிப்படையற்ற  பார்வையோடு,  நம்  வலதுசாரி  நண்பர்கள்  குறிப்பாக  ஷிக் ஷா சமஸ்கிருதி  உட்டா நியாஸ் ( Shiksha Sanskrit Utthan Nyas)  போன்ற RSS அமைப்பின்  கீழ் இயங்கும்  கல்வி அமைப்புகள்  கலாச்சாரம்  என்ற   முகமூடி  அணிந்துகொண்டு  பாலியல் கல்வியை எதிர்ப்பது, நமக்கு  நகைப்பாக  இருந்தாலும்,  இந்த மதவாத  அடிப்படைவாதிகள்  எப்போது  மநு  வேதத்தை  தூர  வைத்து  விட்டு,  விஞ்ஞான  கண்கள்  கொண்டு,  உலக  நிகழ்வுகளைப்  பார்க்க போகிறார்களோ என்ற ஏக்கமும் நம்முள் தோன்றுகிறது.

நம் கிராமப்புறங்களில் புதிய செயல் தொடங்கும் முன் கோவிலில் பூப் போட்டு பார்க்கும்  பழக்கம் இன்றும் உள்ளது.  அந்த  சடங்கில்  குங்குமம்  கிடைத்தால்,  தங்கள்   காரியம்   சிறந்தது  என்று  கடவுள்  நினைத்து  வாழ்த்துவதாக  எண்ணி,  தாங்கள்  நினைத்த   காரியத்தை  செயலாக்குவார்கள்.

அதேபோல்  இந்திய  நாட்டில் மக்கள்  நலம்  சார்ந்தும்,  மாணவர்கள்  நலம்  சார்ந்தும்   முன்னெடுக்க  விழையும்   திட்டங்களுக்கு,  சங்க பரிவாரங்கள்  முந்திக்கொண்டு  கலாச்சார  முகமூடியுடன்  எதிர்ப்பு  தெரிவிப்பதென்பது,  பூப்போட்டு   பார்க்கும்  சடங்கில் குங்குமம் கிடைத்ததற்க்கு  ஒப்பாகும்.

அன்று சமூக நீதியில் தொடங்கி  இன்று  பாலியல்  கல்வி  வரை   சங்க  பரிவாரங்கள் அனைத்து விடையங்களையும் வேதத்தின்,  மதவாதத்தின்  அடிப்படையிலேயே அணுகுவது,  நம் நாட்டுக்கு  மிகவும்  ஆபத்தானது.  கலாச்சார  காவலர்கள்  என்ற  வேடமிட்ட  இவர்களிடம்  நம்  இந்திய  குடியாட்சி  சிக்கி  தவிப்பதைக்  கண்டால்  ஏக்கமும், வருத்தமும் நம்   நெஞ்சை  ஆக்கிரமிப்பது  உறுதி.

1994 இல் நடைப்பெற்ற ஐக்கிய நாடுகளின்  மக்கள் தொகை  மற்றும்  மேம்பாடு  குறித்த  சர்வதேச  மாநாட்டில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் தங்கள்  பள்ளிகளில்   பாலியல்  கல்வியை  கட்டாயப்  பாடமாக்கும் உடன்படிக்கையில்  கையொப்பமிட்டுள்ளனர்.   இந்த உடன்படிக்கை  அடிப்படையிலான  பதின் பருவ  மாணவர்களின்  அடிப்படை பாலியல்   கல்விக்கான உரிமையை  கலாச்சாரம்  என்ற  பொய் காரணம்  கூறி  மறுப்பது  மிகவும்  வருந்தத்தக்க  செயலாகும். பாலியல்கல்வி  என்றால்  என்ன  என்பதையும்,  அதன்  அவசியம்  பற்றியும்,  சமூகத்தில்  அதன்  பலனாய்  ஏற்ப்படும்  நன்மைகள்  குறித்தும்,  பாலியல்  ஆரோக்கியத்திற்கான உலக கூட்டமைப்பு ( World Association for Sexual Health)   தெளிவாக விளக்குகிறது.  அந்த அமைப்பின் ஆய்வாளர்களின்  கூற்றுப்படி , பாலியல் கல்வி  அந்தந்த  நாட்டின்  பழக்க வழக்கங்களுக்கு  ஏற்றவாறு,  மக்களின்  வாழ்க்கை  முறைக்கு தக்கவாறு   வடிவமைக்கப்பட  வேண்டும்  என்கிறது.  ஆகவே  உலக  அமைப்பின்  பாலியல்  கல்வி  சார்ந்த  பரிந்துரைகளை,  நம்  இந்திய  கண்  வழியே  இக்கட்டுரையில்  பார்ப்போம். 

பாலியல் கல்வி என்றால் என்ன?

வாழ்க்கை  கல்வியின்  ஒரு  பிரிவான  பாலியல்  கல்வி  என்பது,  மனித  பாலியல்  உடற்கூறு,  பாலியல்   உரிமைகள்,  பாலியல்  இனப்பெருக்கம்  சார்ந்த  விடையங்கள்,  இனப்பெருக்கத்தோடு  தொடர்புடைய  சமூக  மற்றும்  பொருளாதார  பொறுப்புகள்,  பாலியல் சமத்துவம்,  பாலியல்  சார்ந்த  நோய்களை   தடுப்பதற்கான  முறைகள்  போன்ற  முக்கிய  பாலியல்  அடிப்படை  செய்திகளை,  வயதிற்கு ஏற்ப  விஞ்ஞான  அடிப்படையில்  மாணவர்களுக்கு  பயிற்றுவிக்கும்  கல்வி முறையாகும்.

பாலியல் கல்வியின் அவசியம்.

  1. பதின் பருவத்து பிள்ளைகள், குழந்தை பருவத்திலிருந்து  இளைஞர்களாக  மாற்றமடையும்  வயது  இடைவெளியில்  இருப்பதால்,  அவர்களின்  உடல்   அதிக   அளவிலான  மாற்றங்களையும்,   வளர்ச்சியையும்  எதிர் கொள்ளும்.  அந்த உடல் சார்ந்த,  உளவியல்  சார்ந்த மாற்றங்களின்  அறிவியல்  அடிப்படை  காரணங்களை,  பெற்றோர்  அல்லது  ஆசிரியர்  போன்ற  சரியான  மனிதர்கள்  கற்பிக்க  வேண்டும்.  அவர்களின்  இந்த  வயது  சார்ந்த   அறிவியலை  நாம்  கற்பிக்க  தவறினால்,  சரியான  விடையளிக்கப்படாத   அவர்களின்  கேள்விகள்,  அச்சமாகவும்,  குழப்பமாகவும்   மாறி  அவர்களை  பெரும்  மன  உளைச்சலுக்கு  உட்படுத்தும்  அபாயம் உள்ளது.
  2. நம் இந்தியச் சூழலில் பதின் பருவத்தில் நிகழும் உடல் மாற்றம்  குறித்தும்,  எதிர் பாலினத்தை எதிர் கொள்ளும் போது ஏற்படும்  தடுமாற்றம் குறித்தும் உளவியல்  சிக்கல்கள்  குறித்தும்  பெற்றோர்களிடமோ  அல்லது  உறவினர்களிடமோ  கேட்க  இயலாது.  ஏனெனில் நம் கலாச்சாரத்தில் பாலியல் ஐயப்பாடுகளைக்  கேட்பதை  கூச்சமற்ற  பாவ செயலாக  பார்க்கின்றனர்.  ஐயப்பாட்டை  கேட்கும்  குழந்தையின்  ஒழுக்கம்  சந்தேகிக்கப்படுகிறது.   சரியான பாலியல்  ஐயப்பாடுகளை  பெற்றோரோ, ஆசிரியரோ  கற்பிக்க  தவறினால்,  அந்நியன்  ஒருவன்  இடை  புகுந்து அக்குழந்தைக்கு தவறான  தகவல்களை பொதிக்கும் அபாயம் நிகழும்.
  3. நம் குடும்பங்களும், கல்வி நிலையங்களும்  மாணவர்களுக்கான  அடிப்படை பாலியல்  அறிவை  கற்பிக்க  தவறுவதால்,  அந்த தளத்தை  இணையத்தின்  வாயிலாகவும்,  திரைப்படம்  அல்லது  தொலைக்காட்சி   வாயிலாகவும்,  தவறான  அந்நிய  மனிதர்கள்  ஆசான்கள் போல் அவதரித்து  பாலியல்  சார்ந்த  தவறான  தகவல்களை  நம் பிள்ளைகள் மனதில் செலுத்துகின்றனர். தெளிவற்ற  மனநிலை  கொண்ட  பதின்  பருவத்து  பிள்ளைகள்  தவறான  மனிதர்கள்   சொல்லும்  விடையங்களை  சரியென்று  நம்பி  ஆபத்தான  சில  செயல்களை  சோதித்து  பார்க்கும் அபாயம் நிகழும்.
  4. வணிக முதலாளிகள் அழகு, ஆண்மை, பெண்மை போன்றவற்றுக்கு அளவு கோல் என சில  பிம்பங்களை  காண்பிக்கின்றனர்.  அந்த அளவு  கோலுக்கேர்ப்ப  உடல் வளர்ச்சி இல்லாதவர்களையும்,   உடல் மற்றும்  முக தோற்றம்  இல்லாதவர்களையும்  அழகானவர்கள்  இல்லை  என்பது  போன்ற  ஒரு  மாய  பிம்பத்தை  ஏற்படுத்துகின்றனர்.  வணிக  உலகம்  அவர்களின்  பொருளை  விற்க  கையாளும்  இந்த  லாப நாடக யுத்தி,  உடல்  சார்ந்தும்  உளவியல்  சார்ந்தும்  இளைஞர்களாக  மாறும்  கால  இடைவெளியில்  உள்ள  பதின்   பருவ  பிள்ளைகளை   அதிகமாக  பாதிக்கின்றது.  பாலியல்  கல்வியின்  முக்கிய  பகுதியான, “ உடல் கூறுகள்  நபர் சார்ந்து  மாறுபடும்.  வணிக  உலகம்  காட்டும்  பிம்பங்கள்  அறிவியல்  சார்ந்து  தவறானவை”  என்ற  அடிப்படை  பாலியல்  தகவலை  நம் பிள்ளைகளுக்கு  கற்பித்தால்  மட்டுமே,  அவர்களை   இத்தகு  வணிக  வலைப்பின்னலில் இருந்து மீட்க முடியும்.
  5. உலக சுகாதார மையம் தனது கருத்து கணிப்பில், நான்கில்  ஒரு  பதின்  பருவத்தினர்  மன  அழுத்தத்தால்  பாதிக்கப்பட்டு  இருப்பதாக  கூறுகிறது. WHO  அமைப்பின்  கணக்குப்படி  25  சதவிகிதம்  இந்திய  பதின்  பருவத்து  குழந்தைகள்  மன  அழுத்தத்தில்  இருப்பதாகவும், 11 சதவிகித  குழந்தைகள்  அதிக  மன  சஞ்சலத்தால்  கல்வியியல்  ஆர்வம்  செலுத்த  முடியாமல்  இருப்பதாகவும்  கூறுகின்றனர்.  அவர்களின்  மன  அழுத்தத்திற்கு  பெரும்பான்மையாக  பாலியல்  தெளிவின்மையே  காரணம்  என்றும்  கூறுகின்றனர்.  இந்த  குழந்தைகளுக்கு  சரியான  பாலியல்  கல்வி  வழங்குவதன்  மூலம்,  தவறான அச்சத்தாலும்,  குழப்பத்தாலும்,  தன்னம்பிக்கை  குறைவாலும்   தங்கள்  திறமைகளை  புதைக்க  தயாராகும்  குழந்தைகளின்  திறமைகள்  பாதுகாக்கப்பட்டு இந்த  நாட்டிற்கு  பயன்பட  செய்ய முடியும்.
  6. பதின் பருவத்தினருக்கு இருக்கும் அதிக படியான  உடல்  ஆற்றலை  விளையாட்டுகளில்  பயன்படுத்த  தவறுவதால்,  கல்வியில்  கவனக்குறைவு   ஏற்படுவதாக  WHO கூறுகிறது. பாலியல்  கல்வியின்  முக்கிய  பகுதியான,  அதிக  உடல்  சக்திக்கான  அறிவியல் காரணத்தை மாணவர்களுக்கு கற்பித்து, அந்த  சக்தியை  விளையாட்டு, நீச்சல்  உள்ளிட்ட  விடையங்களில்  செலவு  செய்ய  வேண்டியதன்  அவசியத்தையும் கற்று தருவது  பாலியல்  கல்வியில் முக்கியமான,அவசியமான பணியாகும்.
  7. இந்தியா போன்ற நாடுகளில், பெண் குழந்தைகளுக்கு இன்றும்  பல  இடங்களில்  20 வயதிற்கு முன்னதாகவே, திருமணம்  செய்து வைக்கின்றனர்.  அதனால்  மிக இளம்  வயதிலேயே  சில பெண்  குழந்தைகள்,  கட்டாய  குழந்தைப்  பேருக்குள்  தள்ளப்படுகின்றனர்.  பதின் பருவத்தில் குழந்தை  பெற்றுக்  கொள்வது  தாய்க்கும் சேய்க்கும் ஆபத்தானது  என்று  உலக சுகாதார  அமைப்பு கூறுகிறது. இந்நிலையில்  பெண்களின் உடல் நலன், ஆரோக்கியமான திருமண வயது,  குழந்தை  பேருக்கு  தாய்  உடலுக்கு  தேவையான  இன்றியமையாத  ஊட்டச்சத்துக்கள்  போன்ற அடிப்படை  பாலியல்  கல்வியை  பள்ளிகளில்  கற்பிப்பது  பாலியல்  கல்வியின் மிக இன்றியமையாத பணியாகும்.
  8. பெண்களின்  மாதவிடாய்  சுழற்சியை  தீட்டாக  பார்க்கும்  பண்பாட்டு  சூழலில்  நாம்  வாழ்ந்து  வருகிறோம்.  இது மிகவும்  வருத்தப்பட  வேண்டிய   விடையம்.  இனவிருத்திக்கான  முக்கிய  அடிப்படையான  பெண்ணின்  மாதவிடாய்  பற்றிய  அறிவியலை  இருபாலருக்கும்  கற்பிக்க வேண்டியது  பாலியல்  கல்வியின்  முக்கிய  பணியாகும். பதின்  பருவ  பெண்  பிள்ளைகளுக்கு  மாதவிடாய்  கால  சுகாதார  குறைவால்  பல தொற்று நோய்கள்  வருவதாக  தன்னார்வ  அமைப்பினர்  எடுத்த கருத்துக்  கணிப்பு  ஒன்று  கூறுகிறது.  சுகாதாரமான மாதவிடாய் பழக்கங்களை கற்றுத் தரும்  பணியையும்  பாலியல்  கல்வி  ஆசிரியர்  செவ்வனே  செய்ய  முடியும்.
  9. பாலியல் கல்வியின் முக்கியமான பணிகளுள் ஒன்று,  இனப்பெருக்கத்தோடு  தொடர்புடைய சமுக மற்றும்  உளவியல்  பொறுப்புகளை மாணவர்களுக்கு கற்பிப்பதாகும். மக்கள்  தொகை  பெருக்கத்தின்  பாதிப்புகளையும்,  கருத்தடை  சாதனங்களின்  அவசியம்  பற்றிய  விழிப்புணர்வையும்  மாணவர்களுக்கு  ஏற்படுத்துவது  பாலியல்  கல்வியின்  முக்கிய  பணியாகும். பாலியல்  நோய்கள்  பற்றிய  விழிப்புணர்வையும்,  அந்நோய்களிலிருந்து  பாதுகாத்து  கொள்ளும்  வழிமுறைகளையும்  கற்று  தருவதும், பாலியல்  கல்வியின்  இன்றியமையாத  பணியாகும்.
  10. கணினி மயமாகிவிட்ட இந்த யுகத்தில், பெரும்பாலான  பிள்ளைகள்  வசம்  கணினியும்,  ஸ்மார்ட்போனும்  உள்ளது. உலகத்தை  நம்  கைகளுக்குள்  கொண்டு வரும்  வலைதளம்,  பெரும் பாலான  நேரங்களில்  தேவையற்ற  கீழ்த்தரமாக  பாலியல்  வன்முறைகளையும், குற்றங்களையும்  நாம்  விரும்பாமலேயே  நம்மிடம்  கொண்டு  வந்து  சேர்க்கிறது. இந்த  இணையம்  விரிக்கும்  வலையிலிருந்து  தப்பிக்க  நம் பதின்  பருவ  குழந்தைகளுக்கு  பாலியல் கல்வியின் உதவி தேவை.

 

இவ்வாறாக  பாலியல்  கல்வியை  பள்ளிகளில்  கற்பிப்பதால்,  ஆண்  பெண்ணை  காம  பொருளாக  பார்க்கும்  பார்வை  மாற்றப்பட்டு,  பெண்  என்பவள்  தன்னைப்  போல்  உணர்வுகள்  கொண்ட  எதிர்  பாலினம்  என்ற  விசால  பார்வை  நம்  ஆண்  பிள்ளைகளுக்கு  அதிகரிக்கும். பெண்களும்  ஆண்களை புரிந்து  கொள்ள  இக்கல்வி  உதவும்.  இவ்வாறாக  எதிர்  பாலினத்தை  மதிக்க  கற்றுக் கொண்ட  பிள்ளைகள்  எதிர்காலத்தில்  சிறந்த  குடும்ப  உறுப்பினராகவும்,  சமூகத்திற்கு  பயன்படும்  பொறுப்பான  குடிமக்களாகவும்  திகழ  வாய்ப்புகள்  அதிகம்  உள்ளது.  தாம்சன்  ராய்ட்டர்ஸ்  அறக்கட்டளை  (Thomson Reuters foundation)  இந்த  ஆண்டு  எடுத்த  கருத்து  கணிப்பில்  பெண்களுக்கு  பாதுகாப்பு  இல்லாத  நாடுகளின்  பட்டியலில்  இந்தியா  முதலிடத்தில்  உள்ளது. பெண்கள்  மற்றும்  குழந்தைகள்  மேன்பாட்டுக்கான  இந்திய  அமைச்சரவை  மேற்கொண்ட  குழந்தைகள்  மீதான  பாலியல்  வன்முறை  பற்றிய  கருத்துக்  கணிப்பில் 53  சதவிகித ஆண்  குழந்தைகளும், 47 சதவிகித  பெண் குழந்தைகளும்  பாலியல்  துன்புறுத்தலுக்கு  உட்படுத்தப்பட்டிருப்பதாக  அதிர்ச்சி தகவல் தருகிறது.

பாலியல் கல்வியின் தேவைகள் அதிகரித்திருப்பதை ஆய்வு  முடிவுகள்  பல  அழுத்தமாய்  நமக்கு  உணர்த்தினாலும், கலாச்சாரம்  என்று  பொருந்தாத  பொய்யை  காரணம்  காட்டி  பள்ளிகளில்  பாலியல்  கல்வியை  மறுப்பது,  மாபெரும்  சமூக  சீர்கேட்டிற்கு  வழி  வகுக்கும்.  விஞ்ஞானம்  பெரிதாக  வளர்ந்துள்ள  இந்த  காலகட்டத்திலும்,  மனிதனுக்குள்  சாதிய  உயர்வு  தாழ்வு  உண்மை  என்றும்,  பெண்களில்  30 சதவிகிதம்  மட்டுமே  வணக்கத்துக்கு  உரிய  பெண்மையோடு  இருக்கிறார்கள்  என்றும், பிராமணர்களே  உயர் பதவிகளுக்கு  தகுதியான  அறிவுடையவர்கள்  என்றும்,  பசுவின் சிறுநீர்  புற்று நோயை குணப்படுத்தும் என்றும்,  பிரதமர்  வாயால்  வணக்கம்  என்று  தமிழில்  கூறியமையால்  தமிழ்  வளர்ந்து விடும்  என்றும்,  இந்திய  நாட்டின் அடையாள  மொழியாக இந்தியை  மாற்றினால்  இந்தியாவில்  இப்போதுள்ள  வரலாறு காணாத  பொருளாதார வீழ்ச்சி  மறைந்து, வளர்ந்த நாடுகள்  பட்டியலில் இந்தியா  முதலிடம் பிடிக்கும் என்றும்,  பணமதிப்பிழப்பு  மற்றும் ஜிஎஸ்டி காரணமாக  உச்சத்தை எட்டிய  இந்திய பொருளாதாரம்  பொது துறை வங்கிகளை  இணைத்து அதிக  படியான வாரா கடன்  கொடுப்பதற்கு வழி  வகுத்தமையாலும் , ரிசர்வ் வங்கியில்  அவசர காலத்திற்காக  வைத்திருந்த ரூபாய்  1.76 லட்சம் கோடியை  எடுத்து செலவு  செய்தமையாலும்,  பொருளாதாரம் மேலும் உச்சத்தை எட்டி விடும் என்றும்,  சிறப்பு அந்தஸ்து  உள்ள காஷ்மீர்  மாநிலத்தை தரம்  இறக்கி யூனியன்  பிரதேசமாக மாற்றி,  அம்மக்களையும்  அவர்களின்  தலைவர்களையும்  ஒரு மாதத்திற்கு  மேல் வீட்டு சிறையில்  வைத்திருப்பதால்,  அந்த மாநில  மக்கள் மிகுந்த  மகிழ்ச்சியாகவும் , பாதுகாப்பாகவும்  உள்ளனர்  என்றும்,  முத்தலாக்  தடை  சட்டத்தின்  மூலம் சிவில் குற்றங்களை  கிரிமினல் குற்றமாக மாற்றி, முஸ்லிம்  ஆண்களை 7  ஆண்டுகள் சிறையில்  அடைக்கும் சட்டத்தை  அரசு  கொண்டு  வந்ததை   எண்ணி முஸ்லிம்  பெண்கள் புளகாங்கிதம்  அடைந்து  மகிழ்ச்சி  வெள்ளத்தில்  திளைப்பதாகவும், மேலும் இவ்வாறாக  பல பல அபூர்வ  கருத்துக்களை கூறி  வரும் பொய்களின்  மன்னர்களான சங்க  பரிவாரங்களின்  சொற்படி  இயங்கும்  மத்திய,  மாநில அரசுகள்  பாலியல் கல்வியை  பள்ளிகளில்  நடைமுறைப்படுத்த  மாட்டார்கள் .  நம் பிள்ளைகளின்  நன்மைக்காகவும்,  சமுக நன்மைக்காகவும்  பள்ளிகளில்  பாலியல் கல்வியை  நடைமுறை படுத்த  பெற்றோரும், ஆசிரியர்களும்,  மருத்துவ துறை சார்ந்த  தோழர்களும்,  தன்னார்வ அமைப்பினரும், அரசுக்கு அழுத்தம்  கொடுக்க  வேண்டும்.  இன்றைய  மாணவர்கள்  நாளைய  இந்தியாவை  முன்னோக்கி  இட்டுச்செல்லும்  தலைவர்கள்,  அவர்களுக்கான  அடிப்படை பாலியல்  கல்வியை உறுதி  செய்வது நம் அனைவரின் கடமையாகும்.

- த.பூங்குழலி

மென்பொருள் பொறியாளர்