பிரெக்சிட் விவகாரம் தொடர்பான ஆய்வுக்கான காலக்கெடுவை அடுத்த ஆண்டு ஜனவரி 31-ஆம் வரை நீட்டிக்க கோரிய பிரிட்டன் பாராளுமன்றத்தின் முடிவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
புதிய பிரெக்சிட் உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும், ஐரோப்பிய ஒன்றிய ஆணைய தலைவர் ஜீன் கிளாட் ஜங்கரும் அறிவித்தனர். இந்த புதிய ஒப்பந்தத்தின்படி, சட்டம், எல்லைகள், வர்த்தகம் போன்றவற்றுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் பிரிட்டன் வசம் முழு கட்டுப்பாடும் இருப்பதை உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், சுதந்திரமான வர்த்தகம் மற்றும் நட்பின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு புதிய உறவை ஏற்படுத்தும் என்றும் போரிஸ் ஜான்சன் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், இரு நாடுகளின் பாராளுமன்றமும் ஒப்புதல் அளித்த பிறகுதான் இந்த புதிய உடன்படிக்கை நடைமுறைக்கு வரும். எனவே, இந்த உடன்படிக்கை மீது வாக்கெடுப்பு நடத்துவதற்காக பிரிட்டன் பாராளுமன்றம் கடந்த 19-ஆம் தேதியன்று கூடியது. இது தொடர்பாக ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சுமார் 5 மணி நேரம் விவாதித்தனர்.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் சமீபத்தில் போரிஸ் ஜான்சன் செய்துள்ள புதிய உடன்படிக்கையை ஆய்வு செய்ய அவகாசம் தேவைப்படுவதால் வெளியேறும் நடவடிக்கைக்கான காலக்கெடுவை 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை நீட்டிக்க வேண்டும் என்னும் புதிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு இதன்மீது எம்.பி.க்கள் வாக்களித்தனர். 322 எம்.பி.க்கள் சட்டத்திருத்தத்துக்கு ஆதரவாகவும் 306 எம்.பி.க்கள் எதிர்த்தும் வாக்களித்தனர். 16 வாக்குகள் வித்தியாசத்தில் லெட்வின் சட்டத்திருத்தம் என பெயரிடப்பட்டுள்ள இந்த சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் வெளியேறும் காலக்கெடுவை அடுத்த ஆண்டு ஜனவரி 31-ஆம் வரை நீட்டிக்க கோரிய பிரிட்டன் பாராளுமன்றத்தின் முடிவுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிபர் டொனால்ட் டஸ்க் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.