1784 - பிராங்க்ளின் சுதந்திரக் குடியரசு என்ற தனி நாடு (வட)அமெரிக்காவில் உருவானது. 1783இல் ஏற்பட்ட பாரீஸ் அமைதி ஒப்பந்தத்தின்படி, அமெரிக்காவின் விடுதலைப் போர் முடிவுக்கு வந்துவிட்டது. விடுதலையை அடைந்தபோது, நிரந்தரமாக ராணுவமெல்லாம் தங்களுக்குத் தேவையில்லை என்று முடிவெடுக்குமளவுக்கு, போரினால் ஏற்பட்ட மிகப்பெரிய கடன் சுமையிலிருந்தது அமெரிக்கா. இப்போரில், வடகரோலினா பகுதியே மிகக்குறைந்த பங்களிப்பைச் செய்திருந்தது. கடன்களைத் திருப்பித் தருவதில், தங்கள் பங்குக்காக, சுமார் 3 கோடி ஏக்கர் (1.2 லட்சம் ச.கி.மீ.) நிலப்பரப்பைக் கூட்டரசுக்குக் கொடுப்பது என்று வடகரோலினா, 1784இல் முடிவெடுத்தது. இவ்வாறு வழங்கப்பட்டதிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள், அந்த நிலப்பரப்பை கூட்டரசு தன் பொறுப்பில் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று வடகரோலினா கட்டுப்பாடு விதித்திருந்தாலும், கடனைச் செலுத்துவதற்கு அந்த நிலப்பரப்பு பெரிய உதவியாகவெல்லாம் இல்லாததால், அதன்மீது கூட்டரசு அக்கறை காட்டவில்லை. வடகரோலினாவின் குடிப்படைகளோ, கூட்டரசின் ராணுவமோ, எல்லையில் அமைந்திருந்த இப்பகுதியின் பாதுகாப்புக்காக வரவில்லை.
கடனிலிருக்கும் கூட்டரசு, பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற, அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த பிற நாடுகளிடம் தங்கள் பகுதியை விற்றுவிடும் என்று அஞ்சிய இப்பகுதியினர், தனியாக தங்கள் நாட்டை உருவாக்கினர். நிர்வாக அவை, நீதிமன்றம் என்று முழுமையான அரசு நிர்வாகத்தினை உருவாக்கியதுடன், வரிவிதிப்பு, அலுவலர்களுக்கான ஊதியம் முதலானவற்றையும் நிர்ணயித்துவிட்டனர். அதிகாரப்பூர்வமான பொருளாதார முறையாக பண்டமாற்றுமுறை அறிவிக்கப்பட்டு, பொதுவாகப் பயன்படுத்தப்படும் சோளம், புகையிலை, ஆப்பிள் மது முதலானவை ஏற்கப்பட்டன.
அமெரிக்கா உள்ளிட்ட பிற நாட்டு நாணயங்களும் ஏற்கப்பட்டாலும், நாணயம் இல்லாதது பொருளாதாரக் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, தங்களை பிராங்க்லேண்ட் என்ற பெயரில் மாநிலமாக இணைத்துக்கொள்ளுமாறு அமெரிக்காவை வேண்டினர். பதினான்காவது மாநிலமாக இதனை ஏற்க ஏழு மாநிலங்கள் ஆதரவளித்தாலும், கூட்டரசின் விதிகளைத் திருத்த மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு வேண்டுமென்பதால் அம்முயற்சி தோற்றுப்போனது. பெஞ்சமின் பிராங்க்ளின்மீதான மரியாதையாலேயே அப்பெயரைச் சூட்டியிருந்த இப்பகுதியினர் அவரிடம் உதவிகோரினர். அப்போது, அமெரிக்காவின் தூதுவராக பிரான்சில் இருந்த அவர், நாடாளுமன்றத்தின் முடிவை மீற மறுத்துவிட்டார். எல்லைப்புற பூர்வகுடிகளின் தாக்குதலுக்குள்ளாகி வலுவிழந்து, 1789இல் அரசு கலைக்கப்பட்டது. 1791இல் வடகரோலினா இப்பகுதியை மீண்டும் கைப்பற்றி இணைத்துக்கொண்டது. - அறிவுக்கடல்