1876 - ‘ஆட்டோக்ராஃபிக் பிரிண்ட்டிங்’ என்னும் மிமியோ க்ராஃப் கருவிக்கு, தாமஸ் ஆல்வா எடிசன் காப்புரிமை பெற்றார். “மிமியோக்ராஃப்” என்பது ஸ்டென்ஷில்(உள்வெட்டுத் தகடு) பயன்படுத்தி நகலெடுக்கும் கருவியின் பெயர். ஸ்டென்ஷிலின் வரலாறு காகிதத்திற்கும் முற்பட்டது. மனிதகுலத்தின் முதல் ஓவியங்களான பண்டைக்கால குகை ஓவியங்களில் ஸ்டென்ஷில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, கையை (ஸ்டென்ஷிலாக) சுவற்றில் வைத்து, அதன்மீது வண்ணத்தைத் தெளிப்பதன்மூலம், கையின் வடிவத்தை பதியச் செய்வது. உலகின் மிகப்பழைய குகை ஓவியமான, ஸ்பெயினின் மால்ட்ராவியசோ குகையில் காணப்படும் இத்தகைய கை ஸ்டென்ஷில் ஓவியங்கள், 64 ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் நியாண்டர்தால் மனிதர்களால் வரையப்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. துணிகளில் உருவங்களை அச்சிட, ஸ்டென்ஷில் தொழில்நுட்பம் மிகநீண்ட காலமாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. வார்னீஷ் பூசப்பட்ட காகிதத்தில், அரிக்கும் தன்மையுள்ள வேதிமத்தால் எழுதுவதன்மூலம் ஸ்டென்ஷில் உருவாக்கி நகலெடுக்கும் ‘பேப்பிரோக்ராஃப்’ என்ற முறையை, லண்டனில் படித்துக்கொண்டிருந்த யூஜெனியோ-டி-ஸுக்காட்டோ என்ற இத்தாலியர் 1874இல் உருவாக்கினார். அச்சிடும் எந்திரம் உருவாகிவிட்டாலும், வணிகர்கள், வழக்கறிஞர்கள், காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளிட்டோருக்கு நகலெடுக்கும் தேவை ஏராளமாக இருப்பதை உணர்ந்த எடிசன், கைகளால் எழுதுவதை தகட்டில் ஸ்டென்ஷிலாக உருவாக்கும் ‘மின்சாரப்பேனா’வை உருவாக்கினார்.
இந்த மின்சாரப்பேனா, அது உருவாக்கும் ஸ்டெஷிலைக் கொண்டு நகலெடுக்கும் சமதள அச்சிடும் கருவி ஆகியவற்றைக்கொண்டதுதான் எடிசன் காப்புரிமை பெற்ற கருவி. இந்தக் காப்புரிமையைப் பயன்படுத்தும் உரிமத்தை எடிசனிடம் பெற்று, உற்பத்தி செய்த ஆல்பர்ட் ப்ளேக் டிக் என்பவர்தான் ‘மிமியோக்ராஃப்’ என்ற பெயரை 1887இல் முதன்முதலில் பயன்படுத்தினார். ‘மிமியோமை’ என்ற கிரேக்கச் சொல்லுக்கு போலி என்று பொருள். சமதள அச்சிடும் அமைப்பிற்கு பதிலாக, சுழலும் உருளைகொண்ட, ‘ஆட்டோமேட்டிக் சைக்ளோஸ்டைல்’ என்ற எந்திரத்தை 1891இல் டேவிட் ஜெஸ்ட்டெட்னர் உருவாக்கினார். பேனாவிற்கான லத்தீன் சொல்லான ஸ்டைலஸ் என்பதுடன், சுழலும் என்பதற்கான சைக்ளோ என்ற சொல் சேர்க்கப்பட்டு இப்பெயர் உருவாக்கப்பட்டது. பொதுவாக மிமியோக்ராஃப், அதை உற்பத்திசெய்த நிறுவனங்களின் வணிகப்பெயராலேயே சைக்ளோஸ்டைல், ரோனியோ (க்ராஃப்) என்றே அழைக்கப்பட்டது. நகலெடுக்கும் (ஃபோட்டோ காப்பி) தொழில்நுட்பம் மிகப்பெரும் வளர்ச்சியை எட்டியிருந்தாலும், அதிக எண்ணிக்கையிலான நகல்களை எடுக்க, தானே ஸ்கேன் செய்து ஸ்டென்ஷிலைத் தயாரித்து, நகலெடுக்கும் ‘டிஜிட்டல் ட்யூப்ளிக்கேட்டர்’ என்ற கருவி வளர்ந்த நாடுகளில் இன்றும் பயன்பாட்டில் உள்ளது.