ஜிந்த்:
ஹரியானா மாநிலத்தில் 24 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தங்களின் பெயருக்குப் பின்னால், சாதிப்பெயரை போடுவதில்லை என்று முடிவெடுத்து, பெரும் பாராட்டைப் பெற்றுள்ளனர்.அதிலும், ஆணவக் கொலைகளுக்கு பெயர்போன ஹரியானா மாநிலத்தில், இப்படியொரு மாற்றம் முன்னெடுக்கப்பட்டு இருப்பது, உண்மையிலேயே வரவேற்கத்தக்கதாகவும், ஆச்சரியமாகவும் அமைந்துள்ளது.ஹரியானா மாநிலம், ஜிந்த் மாவட்டத்தில், 24 கிராமங்களை உள்ளடக்கிய ‘கேரா காப்’ என்ற கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. நாகுரா, படோடா, பதானா, கார்சிந்து மற்றும் பர்சோலா உள்ளிட்ட கிராமங்கள் இந்த கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில்தான், இந்த ‘கேரா காப்’ கூட்டமைப்பில் இணைந்துள்ள கிராமங்களில் வசிப்பவர்கள், தங்களின் பெயர்களுக்குப் பின்னால், சாதியை இணைத்து குடும்பப் பெயர்களை (Surname) போடுவதில்லை என்று முடிவை அறிவித்துள்ளனர்.“சாதி என்பது மனிதர்களிடையே பிரிவினையை வளர்க்கும் மோசமான அம்சமாக இருக்கிறது; இதனால் எப்போதும் சமூகம் பிளவுபட்டே கிடக்கிறது; எனவேதான், எங்களின் கிராமக் கூட்டமைப்பு சபையானது, பெயருக்குப் பின்னால், சாதியைப் பயன்படுத்துவதில்லை என்று முடிவெடுத்துள்ளோம்” என்று அவர்கள் கூறியுள்ளனர்.மேலும், “சாதி ஒருவரது பெயரின் பின்னொட்டாக நீடிப்பது, அந்த மனிதர் பற்றி முன்கூட்டியே தவறான கணிப்புக்கு மற்றவர்களை இட்டுச் செல்கிறது” என்று கூறும் கிராம மக்கள், யாராவது தங்களின் பெயருக்குப் பின்னால், இணைப்பை விரும்பினால், அவர் தனது ஊர்ப்பெயரை வேண்டுமானால் இணைத்துக் கொள்ளலாம் என்று ஆலோசனை வழங்கியுள்ளனர்.
சாதிப் பின்னொட்டை வெட்டி எறிந்தது மட்டுமல்லாமல், வேறு சில தீர்மானங்களையும் ‘கேரா காப்’ கூட்டமைப்பினர் எடுத்துள்ளனர்.ஒருவர் தனது பாட்டியின் கோத்திரத்தைப் பயன்படுத்துதலை கைவிடுவது; இறப்பையொட்டிய துக்கம் கடைப்பிடிக்கும் நாட்களின் எண்ணிக்கை 13-லிருந்து 7 ஆக குறைப்பது என்றும் முடிவு செய்துள்ளனர்.