கொரோனா தொற்றால் பிறந்து 6 வாரங்களே ஆன குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவின் உகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பரவி உள்ளது. வல்லரசு நாடுகளும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் நிலைகுலைந்துள்ளன. இந்நிலையில் அமெரிக்காவில் மட்டும் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 5110 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இத்தாலி ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு அடுத்த படியாக வைரஸ் உருவான சீனாவை விட அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா உள்ளது . இந்நிலையில் பிறந்து 6 வாரங்களே ஆன குழந்தை கொரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ஆளுநர் லாமொண்ட் கூறியதாவது கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதைத்தொடர்ந்து மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று இருந்தது உறுதியாகி உள்ளது. இது மனதை உருக்குகிறது. இதுவரை கேள்விப்பட்ட கொரோனா உயிரிழப்புகளில் இது மிகவும் இளம் வயது உயிரிழப்பு என தெரிவித்துள்ளார்.