உலகின் நீண்ட தொலைவு பயணிக்கும் விமானத்தின் சோதனை ஓட்டம் இன்று நியூயார்க் நகரிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு ஏறக்குறைய 20 மணிநேரம் இடை நிற்காமல் பயணிக்க இருக்கிறது.
குவாண்டாஸ் போயிங் 787 ரக விமானம் ஐம்பது பயணிகளுடன், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு தொடர்ந்து 20 மணிநேரம் வானில் இடை நிற்காமல் பறந்து 17 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் இந்த விமானம் பயணிக்க உள்ளது. இதைத் தொடர்ந்து, விமானத்தில் பயணிக்கும் பயணிகள், ஊழியர்கள், பைலட் ஆகியோரின் தூக்கநிலை, உடலில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்ய இருக்கிறார்கள். குறிப்பிட்ட இடைவெளியில் விமானத்தில் பயணிக்கும் ஊழியர்களின் சிறுநீர் மாதிரியும் சேகரிக்கப்பட்டு அதில் உள்ள மெலடோனின் அளவு பரிசோதிக்கப்படும்.
இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தபின், 2022-ஆம் ஆண்டுக்குள் சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்போன் நகரங்களிலிருந்து லண்டன், நியூயார்க் நகரங்களுக்கு விமானப் போக்குவரத்து தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.