tamilnadu

img

தொலைத் தொடர்பு துறையின் வருவாய் 7 சதவீதம் வீழ்ச்சி - மத்திய அரசு

தொலைத் தொடர்பு துறையின் வருவாய் 7.06 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருப்பதாக மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் போது மாநிலங்களவையில், தொலைத்தொடர்பு கொள்கை மூலம் மத்திய அரசு ஈட்டிய வருவாய் எவ்வளவு என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அதற்கு மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எழுத்துப்பூர்வ பதில் ஒன்றை அளித்தார். அதில், தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அளித்துள்ள தகவலின் படி, தொலைத் தொடர்பு சேவைத் துறையின் 2018 - 2019ஆம் ஆண்டுக்கான வருவாய் 1,44,681 கோடி ரூபாய் எனத் தெரிவித்துள்ளார்.

இதுவே 2017-18ஆம் ஆண்டில் 1,55,680 கோடி ரூபாயாக இருந்தது. இதன் மூலம் 7.06 சதவீதம் வருவாய் குறைந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2017 - 2018ம் ஆண்டு தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ஒரு பயனாளர் மூலம் சராசரியாக 124.85 ரூபாய் வருவாய் கிடைத்துவந்தது. ஆனால் இதுவே கடந்த 2019-ஆம் நிதியாண்டில் 71.39 ரூபாயாக வீழ்ச்சி அடைந்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்துப் பேசிய அவர், தொலைத் தொடர்பு அமைச்சரவை செயலர் தலைமையில் செயலாளர்கள் குழு அமைக்கப்பட்டு தொலைத்தொடர்புத் துறை தொடர்பான பிரச்னைகளை பரிசீலித்து வருகிறதாகவும், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் நிதி நெருக்கடியை சந்திப்பதாகவும் தெரிவித்தார். அதன் அடிப்படையில், 2020-21 மற்றும் 2021-22ம் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கான அலைவரிசை கட்டணத்தை செலுத்த கால அவகாசம் வழங்கியுள்ளோம் என்றும்  தெரிவித்துள்ளார்.