அமெரிக்க அதிபர் ட்ரம்பை பதவி நீக்கக் கோரும் இரு தீர்மானங்கள் அந்நாட்டு நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியுள்ளது.
ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக போட்டியிட உள்ள ஜோ பிடனின் மகனுக்கு உக்ரைன் எரிவாயு நிறுவனத்தில் உள்ள வர்த்தகத் தொடர்பு குறித்து விசாரணை நடத்துமாறு உக்ரைன் அரசிடம் ட்ரம்ப் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த விசாரணையை நடத்தி முடிக்கும் வரை உக்ரைனுக்கு அமெரிக்காவின் நிதியுதவியையும் நிறுத்தி வைத்ததாக குற்றச்சாட்டுகள் ட்ரம்ப் மீது எழுந்தன. இதன் மூலம் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம், தேசிய பாதுகாப்பு, அதிபர் தேர்தலுக்கான நம்பகத்தன்மை உள்ளிட்டவற்றுக்கு ட்ரம்ப் ஆபத்து விளைவித்து விட்டார் என்றும் அமெரிக்க தேச இறையாண்மைக்கு துரோகம் இழைத்து விட்டார் என்றும் ஜனநாயக கட்சி குற்றம் சாட்டியது.
இதை அடுத்து ட்ரம்ப்பை பதவியை விட்டு நீக்கக் கோரிய தீர்மானம், பிரதிநிதிகள் சபையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது நாடாளுமன்றத்தில் 14 மணி நேரம் விவாதம் நடந்தது. பிரதிநிதிகள் சபையில், ட்ரம்பை பதவி நீக்கக் கோரும் முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 230க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் வாக்களித்தனர். 197 உறுப்பினர்கள் மட்டும் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தனர். இதனை அடுத்து, நாடாளுமன்ற நடவடிக்கைகளை தடுத்தார் என்றும் ட்ரம்புக்கு எதிரான 2வது தீர்மானம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இதற்கு ஆதரவாக 229 உறுப்பினர்கள் வாக்களித்தனர். 198 உறுப்பினர்கள் மட்டும் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தனர். இந்த தீர்மானமும் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து, பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானங்கள், செனட் சபையில் விவாதத்திற்கு அனுப்பப்படும். அங்கு விவாதத்திற்குப் பின் வாக்கெடுப்பு நடக்கும். இங்கேயும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் ட்ரம்ப்பின் பதவி பறிபோகும் நிலை உள்ளது.