வேலூர்,அக்.22- வேலூர் மாவட்டத்தில், மர்மக்காய்ச்சல், வைரஸ் மற்றும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. வேலூர் காட்பாடி அருகே, விருதம்பட்டு காளியம்மன் கோவிலை சேர்ந்தவர், விஜய், (35); மளிகை வியாபாரி. இவரது, 18 மாத பெண் குழந்தை ஜனனி. கடந்த, 20 ஆம் தேதி காய்ச்சலில் பாதிக்கப்பட்டு, வேலூர் சி.எம்.சி., மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டது. இந்நிலையில் அக்குழந்தை இறந்தது. மர்மக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குழந்தை ஜனனி இறந்ததாக மருத்துவர்கள் கூறினர். இதையடுத்து, வேலூர் மாநகராட்சி சுகாதாரத் துறையினர் அந்த பகுதியில், தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் மர்மக் காய்ச்சலுக்கு, ஏற்கனவே இரண்டு பேர் இறந்துள்ள நிலையில், இது மூன்றாவது உயிரிழப்பாகும்.