tamilnadu

போக்குவரத்துக்கு இடையூறாக விளம்பரத் தட்டிகள்

தஞ்சாவூர், மே 21-போக்குவரத்து நெரிசலால் திணறும் திருச்சிற்றம்பலம் பகுதியில், கடைவீதி மற்றும் சாலையோரங்களில் உள்ள விளம்பர தட்டிகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ளது திருச்சிற்றம்பலம். இங்கு பல்வேறு கிராமங்களை சேர்ந்தபொதுமக்கள் பல்வேறு தேவைகளுக் காக வருகின்றனர். பட்டுக் கோட்டையில் இருந்து அறந்தாங்கி, காரைக்குடி,புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கு செல்லும், முக்கிய வழித்தடமாக திருச்சிற்றம்பலம் அமைந்துள்ளது. இங்குள்ள கடைவீதியில் வாகனப் போக்குவரத்து எப்போதுமே அதிகமாக இருக்கும். இங்கு 200-க்கும் மேற்பட்ட கடைகள், தொழில் நிறுவனங்கள்,அரவை மில், திருமண மண்டபங்கள், மருத்துவமனைகள், அரசு மற்றும் தனியார் வங்கிகள் உள்ளன. ஆக்கிரமிப்பு காரணமாக தற்போது இங்குள்ளகடைவீதி குறுகலாகவே உள்ளது. இந்நிலையில் சாலையோரங்களில் விளம்பர தட்டிகள் வைக்கப்பட்டுள் ளன. இதனா‌ல், வாகன ஓட்டிகள், வாகனங்களை இயக்க மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் கடைவீதியில் ஆங்காங்கே ஒழுங்கற்ற முறையில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல்ஏற்படுகிறது. மேலும், கடைகள் முன்புஇருசக்கர வாகனங்கள், சுமை ஏற்றும்வேன்கள் கொண்டு வந்து நிறுத்தப்படுவதால், கடைக்காரர்களுக்கும் வாகனஓட்டிகளுக்கும் தேவையற்ற வாக்குவாதம் ஏற்படுகிறது. எனவே திருச்சிற்றம்பலம் நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றுபொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், “திருச்சிற்றம்பலம் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை தீர்வு காணப்படவில்லை. மேலும், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள விளம்பர தட்டிகளை அகற்றுவதோடு, காலை, மாலை வேளைகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத் தும் பணியில் காவல்துறையினர் ஈடுபடவேண்டும்” என்றனர்.