திருவள்ளூர், ஆக. 30 - இருளர் இன மக்களுக்கு முதலமைச்சர் கொடுத்த குடிமனையை அபகரிக்க முயற்சிப்பதை மாவட்ட ஆட்சியர் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம் பேரிட்டிவாக்கம் ஊராட்சிக்குட்பட்ட வடதில்லை கிராமத்தில் ஏரிக்கரை மீது கொட்டகை (குடிசை) அமைத்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருளர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்த ஓலை குடிசைக்குள் வெய்யிலும் வரும், மழை காலத்தில் படுக்கையும் நனையும். இயற்கை சீற்றங்களை தாங்கிக் கொண்டு, பாம்பு, பல்லிகளுக்கு மத்தியில் குழந்தை குட்டிகளோடு குடும்பம் நடத்தி வந்தனர். இந்த கொடுமைகளிலிருந்து விடுபட நிரந்தரமாக இருக்க குடிமனை மற்றும் பட்டா கேட்டு கோரிக்கையை வைத்தனர். மாவட்ட ஆட்சியர், ஊத்துக்கோட்டை வட்டாச்சியர் ஆகியோருக்கு பலமுறை மனுக்களை அளித்ததோடு கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு இயக்கங்களை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக கடந்த 2019 ஜூலை மாதத்தில் மொத்தமாக சென்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து குடிமனை, பட்டா கேட்டு மனு அளித்தனர். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட ஆட்சியர் அதற்கான நடவடிக்கையில் இறங்கினார். ஊத்துக்கோட்டை வட்டாச்சியர், துணை வட்டாச்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டு வடதில்லை கிராமத்தில் சர்வே எண் 175/3ல் இடத்தை அதிகாரிகள் தேர்வு செய்தனர்.
குடிமனைப் பட்டா
இந்த நிலத்தில் தலா ஒன்றரை செண்ட் வீதம் ஏரிக்கரை மீது குடியிருந்த விஜியா, சாந்தி, லதா, பவித்ரா, வள்ளி, நாகரத்தினம், முத்தம்மாள், சவுந்தரியா, கன்னியம்மாள், வெங்கட்டம்மாள், வசந்தி, ராணி ஆகிய 12 குடும்பங்களுக்கு ஊத்துக்கோட்டை வட்டம், கூரப்பாக்கத்தில் நடந்த அரசு விழாவில் தமிழக முதல்வர் பழனிச்சாமி குடிமனை பட்டாக்களை வழங்கினார். அந்த இடத்தில் இருளர் இன மக்கள் குடியேறி புது வாழ்க்கையை தொடங்கினர். இவர்களில் சாந்தி க/பெ மணி, விஜியா க/பெ விஜி ஆகிய இரண்டு நபர்களுக்கு ஊராட்சி மன்றம் சார்பில் தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு அதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆட்சேபனை
இந்நிலையில், இருளர் இன மக்களுக்கு வழங்கிய இடம், வடதில்லை கிராமம் அருள்மிகு மரகதாம்பிகை சமேதஸ்ரீ பாபஹரேஸ்வர் திருக்கோயிலுக்கு சொந்தமானது. அங்குள்ள 52 செண்ட் இடத்தில் வசித்து வந்தோம். அர்ச்சர் இல்லாதபோது இரவோடு இரவாக இடத்தை ஆக்கிரமித்துள்ளனர். எனவே, இலவச குடிமனை பட்டா வழங்கிய செல்லாது என்று தற்போது சதாசிவ அர்ச்சகர் என்பவரின் மனைவி சரஸ்வதி புகார் தெரிவித்துள்ளார்.
அர்ச்சகர் குடியிருப்பு சர்வே எண் 175/6ல் உள்ளது. அந்த குடியிருப்பு உள்ள 26 செண்ட் இடத்திற்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதன் அருகில் உள்ள கிராம நத்தம் சர்வே எண் 175/3ல் அமைந்துள்ள 26 செண்ட் நிலத்தில்தான் இருளர் இன மக்களுக்கு முதலமைச்சர் குடிமனை பட்டா வழங்கியுள்ளார். மேலும் அந்த மக்கள் வசிக்க ஏதுவாக வருவாய்த் துறையினரே குடிசை அமைத்துக் கொடுத்தனர். எனவே, இடம் ஆக்கிரமிக்கப்படவில்லை, அந்த நிலம் கோவிலுக்கும் சொந்தமானதும் இல்லை எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இருளர் இன மக்களுக்கு கொடுக்கப்பட்ட நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய சாதி பிரச்சனை, கோவில் நிலம் ஆக்கிரமிப்பு என மக்களை திசை திருப்புகின்றனர். மேலும், அடியாட்கள் மூலம் குடிசைகளில் இருந்து வெளியேறுமாறு மிரட்டி வருகின்றனர்.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு?
இதனையொட்டி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழரசன், துணை நிர்வாகிகள் முருகன், முரளி ஆகியோர் அந்த பகுதிக்கு சென்று கள ஆய்வு செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆர். தமிழரசன், அதிகாரிகள் ஆய்வு செய்து, முதலமைச்சர் கொடுத்த பட்டா கொடுத்துள்ளார். எனவே, அந்த மக்களுக்கு பாதுகாப்பு வழங்கவும், வீடுகட்டவும் அதிகாரிகள் போதிய பாதுகாப்பு வசதிகளை செய்து தர வேண்டும் என்றார்.பொதுவெளியில் இருளர் இன மக்களை இழிவாக பேசும் குருக்கள் மனைவி சரஸ்வதி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிய வேண்டும். கொலை மிரட்டல் விடுத்த சமூக விரோதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அனைவருக்கும் தொகுப்பு வீடுகள் கொடுத்து, மின் கம்பங்கள் அமைத்து வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும், குடிநீர், சுடுகாட்டு பாதை போன்ற அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
- பெ.ரூபன்