தஞ்சாவூர், டிச.22- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள வீரியங்கோட்டை அட்லாண்டிக் பன்னாட்டுப் பள்ளியில் வெள்ளி, சனி இரு தினங்கள் அறிவியல் கண்காட்சி நடை பெற்றது. கண்காட்சிக்கு பள்ளி சேர்மன் சீனிவாசன் தலைமை வகித்தார். குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வீ.மனோகரன் தொடங்கி வைத்தார். பள்ளித் தாளாளர் ஜனனி முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் அருள் பிரபாகரன் வரவேற்றார். கண்காட்சியில் கணிதம், அறிவியல், கணினி, உள்ளிட்ட பல்வேறு வகையான படைப்பு அரங்குகளை மாணவ, மாணவிகள் காட்சிப்படுத்தினர். மேலும் “காசு கதிரேசன்” என்பவரின் நாணயக் கண்காட்சியும் இடம்பெற்றது. இதில் பல்வேறு காலக் கட்டங்களைச் சேர்ந்த பழங்கால நாணயங்கள், உலக நாடுகளின் பணம் இடம் பெற்றன. ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பெற்றோர்கள் பார்வை யிட்டனர். இதன் ஏற்பாடுகளை மாணவர்களுடன் இணைந்து ஆசிரிய, ஆசிரியைகள் செய்தனர்.