tamilnadu

img

ஆர்டிஐ சட்டத்திருத்த மசோதா இடதுசாரிகள் கடும் எதிர்ப்பு

புதுதில்லி, ஜூலை 22- எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்டத்திருத்த மசோதா மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.  தகவல் ஆணையர்களின் ஊதியம், பணிக்காலம் உள்ளிட்டவற்றை அரசே தீர்மானிக்கும் வகையிலான ஆர்டிஐ சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை மக்களவையில் அறிமுகப்படுத்தியது. இந்த சட்டத்திருத்தம் ஆர்டிஐ சட்டத்துக்கு அளிக்கப்படும் சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்று எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. தகவல் ஆணையர்களின் பணிக்காலம் உள்ளிட்ட வற்றை அரசின் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவருவதன் மூலம், தேர்தல் ஆணையருக்கு நிகரான அதிகாரத்தை இந்த சட்டத்திருத்த மசோதா பறிக்கிறது. இது சுயேட்சையான அமைப்பு மீது நடத்தப்படும் தாக்குதல் என்று ஆர்டிஐ சட்டத்திருத்த மசோதாவுக்கு துவக்க நிலையிலேயே இடதுசாரிக் கட்சிகளின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும், இந்த சட்டத்திருத்த மசோதா திங்களன்று மக்களவையில் வாக்கெடுப்புக்கு வந்தது. இதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் பி.ஆர்.நடராஜன், சு.வெங்கடேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கே.சுப்பராயன் உள்ளிட்ட 9 உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில், நிறைவேறியது.  மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை யான எண்ணிக்கை இல்லாததால் அங்கு இந்த சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு வலிமை யாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.