சிஐடியு 16-ஆவது மாநில மாநாடு வரவேற்புக் குழு அமைப்பு
கோயம்புத்தூர், ஜூன் 1 - சிஐடியு 16-ஆவது மாநில மாநாட்டிற்கு 37 நிர்வாகிகள் உட்பட 201 பேர் கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது. இந்திய தொழிற்சங்க மையத்தின் (CITU) 16-ஆவது மாநில மாநாடு, கோவையில் நவம்பர் 6,7,8,9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த மாநாட்டை சிறப்புற நடத்துவதற்கான வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டம் கோயம்புத்தூர், மசக்காளிபாளையம் ஹர்ஷா மஹாலில் ஞாயிறன்று நடைபெற்றது. சிஐடியு கோவை மாவட்டச் செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன், பொதுச்செயலாளர் ஜி. சுகுமாறன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர். நடராஜன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் யு.கே. வெள்ளிங்கிரி, சிஐடியு மாநிலத் துணைப்பொதுச்செயலாளர் எஸ். கண்ணன், சிபிஎம் கோவை மாவட்டச் செயலாளர் சி. பத்மநாபன், சிஐடியு துணைத் தலைவர் எம். சந்திரன் உள்ளிட்டோர் உரையாற்றினர். நிர்வாகிகள் தேர்வு இக்கூட்டத்தில் சிஐடியு மாநில மாநாட்டை சிறப்புற நடத்துவதற்கான 201 பேர் கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது. மேலும், வரவேற்புக் குழுவின் கவுரவத் தலைவர்களாக பி.ஆர். நடராஜன், யு.கே. வெள்ளியங்கிரி ஆகியோரும், வரவேற்புக்குழு தலைவராக சி. பத்மநாபன், செயலாளராக எஸ். கிருஷ்ணமூர்த்தி, பொருளாளராக ஆர். வேலுசாமி உள்ளிட்ட 37 நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர். சிஐடியு மாநில துணைச்செயலாளர் எம். மகாலட்சுமி, உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு செயலாளர் எம். தனலட்சுமி, சிஐடியு கோவை மாவட்டத் தலைவர் கே. மனோகரன் மற்றும் சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். முடிவில், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே. ரத்தினகுமார் நன்றி கூறினார். ரூ. 10 லட்சம் நிதியளிப்பு முன்னதாக மாநில மாநாட்டு நிதி- முதல் தவணையாக ரூபாய் 10 லட்சத்து 46 ஆயிரத்தை அ. சவுந்தரராசனிடம் சிஐடியு நிர்வாகிகள் மற்றும் இணைப்பு சங்கங்களின் நிர்வாகிகள் வழங்கினர். 42 ஆண்டு கால இடைவெளிக்குப் பின்னர், சிஐடியு மாநில மாநாடு கோவையில் நடைபெற உள்ள நிலையில், வரவேற்புக்குழு அமைப்பு கூட்டமே மாநாடு போன்ற உற்சாகத்துடன் நடைபெற்றது.