குழந்தைகளின் சராசரி எடையில் 10% மட்டுமே புத்தக பையின் எடை இருக்க வேண்டும் என கர்நாடகா அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
கர்நாடகா மாநில தொடக்கக்கல்வி மற்றும் மேல்நிலை கல்வித்துறை பள்ளி குழந்தைகளின் புத்தக பையின் எடை குறித்ததான அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அந்த உத்தரவின்படி, ஒன்றாம் மற்றும் இரண்டாம் வகுப்பில் படிக்கும் குழந்தைகளின் புத்தக பையின் எடை 1.5 முதல் 2 கிலோ வரை இருக்கலாம் எனவும், மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பு குழந்தைகளின் புத்தக பையின் எடை 2 முதல் 3 கிலோ வரை இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான குழந்தைகளின் புத்தக பையின் எடை 3-4கிலோ வரை இருக்கலாம் எனவும், 9 மற்றும் 10 வகுப்பு குழந்தைகளின் புத்தக பையின் எடை 5கிலோவிற்கு மிகாமலும் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை கடந்த 2016-2017 கல்வியாண்டில் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறை, பெங்களூரிலுள்ள இந்திய தேசிய சட்டப்பள்ளி மற்றும் குழந்தை மற்றும் சட்ட மையம் ஆகியோர் இணைந்து நடத்திய ஆய்வின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது.