tamilnadu

img

ஜாமியா மிலியா மாணவர்களுக்கு கோழிக்கோட்டில் எஸ்எப்ஐ வரவேற்பு

கோழிக்கோடு, டிச.18- தில்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் காவல்துறையினர் மற்றும் குண்டர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி ஊர் திரும்பிய  மாணவர்களுக்கு கோழிக்கோடு ரயில் நிலையத்தில் இந்திய மாணவர் சங்கம் சிறப்பான வரவேற்பளித்தது. காவல்துறையின் தாக்குதலில் படுகாயம் அடைந்த மாணவர்கள் உட்பட 40 மாணவர்கள் புதனன்று அதிகாலை 4 மணிக்கு நிஜாமுதீன்- திருவனந்தபுரம் ரயிலில் கோழிக்கோடு வந்தனர். இவர்கள் கோழிக்கோடு, வயநாடு, மலப்புறம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர். ரயில் நிலையத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் டி.அதுல், நிர்வாகிகள் ஸினான் உம்மர், வி.சி.அனுஜித், எம்.டி.முகம்மது இர்ஷாத், எம்.அக்சய், செய்யது முகம்மது சாதிக் உள்ளிட்ட ஏராளமானோர் முழக்கமிட்டு வரவேற்றனர். முன்னறிவிப்பு இல்லாமல் காவல்துறையினர் ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தை மூடினர். அதைத் தொடர்ந்து விடுதியிலிருந்தும் வெளியேற வேண்டிய கட்டாயம் மாணவர்களுக்கு ஏற்பட்டது. அவர்களுக்கு கேரளா ஹவுசில் தங்கும் வசதி கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவின்பேரில் செய்யப்பட்டிருந்தது. டுவீட்டரில் இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் வி.பி.ஷானு இவ்வாறு கூறியிருந்தார்; ‘அரசமைப்பு சாசனத்தின் விழுமியங்களை உயர்த்திப்பிடிக்கும் போராட்டத்தில் இரைகளாக்கப்பட்ட ஒவ்வொரு மாணவரையும் அரவணைக்க எஸ்எப்ஐயும் அதன் உறுப்பினர்களும் எந்த இடத்திலும் தயாராக வேண்டும்’.