உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
புதுதில்லி,நவ.13- கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக தாவிய காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள அதிருப்தி எம்எல்ஏக்கள் 17 பேரை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை இக்கட்சிகளின் 17 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவாக தாவி, கவிழ்த்தனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு எடியூரப்பா தலைமை யில் பாஜக ஆட்சி பொறுப்பேற்றது. 17 எம்எல்ஏக்களும் தங்கள் ராஜினாமா கடிதங்களை சபாநாயகருக்கு அனுப்பினர். ஆனால் இவர்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்கவில்லை.
17 எம்எல்ஏக்களும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காத காரணத்தி னால் கொறடா உத்தரவை மீறியதாக சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் நடப்பு சட்டமன்றத்தின் பதவிக் காலம் வரை அவர்கள் எம்எல்ஏ பதவியை வகிக்க முடியாது என்றும் சபாநாயகர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தள அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதி மன்றம் புதனன்று தீர்ப்பளித்தது. அதில், கட்சி தாவல் தடைச்சட்டத்தின் கீழ், கர்நாடக எம்.எல்.ஏ.,க்கள் 17 பேரை தகுதி நீக்கம் செய்து கர்நாடக சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும். தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் 17 பேரும், தேர்தலில் போட்டியிடலாம். தகுதி நீக்கம் செய்யப்பட்ட கர்நாடக எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தை அணுகிய விதத்தை ஒருபோதும் ஊக்குவிக்க முடியாது. அவர்கள், முதலில், கர்நாடக உயர்நீதிமன்றத் தைத்தான் அணுகியிருக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
டிச.5-ல் இடைத்தேர்தல்
இந்நிலையில் காலியாக உள்ள 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு டிசம்பர் 5 அன்று இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.