திருப்பூர், மே 13 –ஊராட்சி நிர்வாகங்களில் ஆளும் கட்சி பிரமுகர்களின் தலையீட்டைக் கண்டித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் வெள்ளகோவில் மற்றும் அவிநாசியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.உடுமலை வட்டம், பெரியவாளவாடி ஊராட்சி செயலாளராக பணியாற்றியவர் முருகன். இந்த ஊராட்சியைச் சேர்ந்த ஆளும் கட்சி பிரமுகர் ஒருவர் ஊராட்சி நிர்வாகத்தில் தொடர்ச்சியாகத் தலையிட்டு எல்லை மீறி தொல்லை கொடுத்து வந்தார். இதனால் மன உளைச்சலுக்கு ஆட்பட்ட முருகன் மாரடைப்பால் அகால மரணமடைந்தார். எனவே, ஊராட்சி நிர்வாகத்தில் ஆளும் கட்சி பிரமுகர்களின் தலையீட்டைக் கண்டித்து திங்களன்று ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில்பல்வேறு இடங்களில் கண்டனஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வட்டாரச் செயலாளர் கே.முத்துச்செல்வன் தலைமைவகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் பி.செந்நதில்குமார் பங்கேற்று விளக்கவுரை ஆற்றினார். மாவட்டத் துணைத் தலைவரும், வட்டார வளர்ச்சி அலுவலருமான பி.ஜெயக்குமார் உள்பட வளர்ச்சித்துறை அலுவலர்கள் இதில் பங்கேற்றனர். முடிவில் வட்டாரப் பொருளாளர் கே.செந்தில்குமார் நன்றி கூறினார்.
அவிநாசி
அவிநாசி ஊராட்சி ஒன்றியஅலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வெள்ளிங்கிரிதலைமை வகித்தார். கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்களை விளக்கி மாவட்ட பொறுப்பாளர் ரமேஷ் பேசினார். அப்போது, உயிரிழந்த முருகன்குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அவரின் மரணத்திற்கு காரணமான சம்பந்தப்பட்ட ஆளுங்கட்சி பிரமுகர் மீது வழக்கு பதிவுசெய்ய வேண்டும். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க தமிழகஅரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்திப் பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.