tamilnadu

img

அவிநாசி

அவிநாசி, மே.19 - அவிநாசி பகுதியில் மளிகை கடைகள், ஓட்டல்களில் பயன்படுத்தப்பட்டு வந்த தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், உரிமையாளர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதமாக வசூலித்தனர்.அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி லட்சுமி தலைமையிலான குழுவினர் வெள்ளியன்று மாலை சேவூர் கைகாட்டி ரவுண்டானா, கோபி , புளியம்பட்டி சாலை ஆகிய பகுதிகளில் உள்ள பேக்கரிகள், ஓட்டல்கள், இறைச்சி கடைகள்,  மளிகை கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் டம்ளர்களைக் கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்தனர். மொத்தம் 60 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.200 முதல் ரூ.1000 வரை அபராதம் வசூலிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக ரூ.4,800 அபராதம் வசூலிக்கப்பட்டது.இதேபோல், அவிநாசி பேரூராட்சி பகுதிகளில் உள்ளகடைகளில் சனிக்கிழமை தீடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனையில் பிளாஸ்டிக் பைபள், டம்ளர்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டு கடை உரிமையாளர்களுக்குரூ.21 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், முதன்முறையாக சோதனை நடைபெற்றதால் மிக குறைந்த அளவில் அபராதம் வசூலிக்கப்பட்டது. மீண்டும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினாலும், விற்பனை செய்தாலும் அவர்களிடம் அதிகளவில் அபராதம் வசூலிக்கப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.