தவளை சாப்பிட்ட சிறுவர்கள்
கொரோனா ஊரடங்கால் இந்தியா முழுவதும் சிறு-குறு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் உட்பட கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பசிக்கொடுமை கொரோனாவை விட கொடியது என்பதை பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியில் உறைய வைக்கிறது.
பீகார் மாநிலம் ஜெஹனாபாத்தில் குழந்தைகள் தவளைகளை உண்கின்றனர். ஊரடங்கு உத்தரவால் வீட்டில் உணவுப்பொருட்கள் தீர்ந்துவிட்டன. எங்கள் பெற்றோர்களுக்கு வாழ்வாதாரம் இல்லை. பசிக்கொடுமையிலிருந்து மீள தவளைகளை உண்பதாக அபிஷேக்குமார் என்ற சிறுவன் கூறுகிறான். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜெஹனபாத் மாவட்டம் பீகாரின் மிகவும் பின்தங்கிய பகுதியாகும். இங்கு தலித் மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர்.
ராஜநாகத்தை சாப்பிட்ட கும்பல்
அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொண்ட கும்பல் 12 அடி ராஜநாகத்தை கொன்று தோள்களில் வைத்துள்ளது போலவும், சமைத்துச் சாப்பிடுவது போலவும் சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகப் பரவியது. அந்த வீடியோவில், பேசும் ஒருவர், வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், அரிசி கிடைக்கவில்லை. அதனால் காட்டுக்குள் எதையாவது தேடிச் சென்றோம், ராஜநாகத்தை கண்டுபிடித்து கொண்டு வந்தோம் எனவும் பேசுகிறார்.’
இந்தச் சம்பவம் உண்மையா என்பதை அறிந்துகொள்ள அருணாச்சல பிரதேச துணை வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி உமேஷ்குமாரை தொடர்புகொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இதற்கிடையில் இராஜநாகத்தை வேட்டையாடியவர்கள் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பாம்பை பிடித்தவர்கள் தப்பியோடிவிட்டதாகவும், இராஜநாகத்தை கொன்றது தண்டனைக்குரிய குற்றம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.