tamilnadu

img

தோழர் முகில் உடல் இன்று தானம்

 வேலூர், ஜூன் 16- தோழர் முகில் சிஎம்சி மருத்துவமனையில் மரண மடைந்தார். அவருடைய உடல் சனிக்கிழமை (ஜூன் 16) பிற்பகல் 12 மணிக்கு பொய்கையிலிருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு உடல் தானமாக வழங்கப்படுகிறது. முகில் உடலுக்கு தமுஎகச பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சன்யா, அன்பரசு, கருணா, வேலூர் மாவட்டத் தலைவர் சுரேந்திரன், சுகிர்தராணி, ரஜினி, சிபிஎம் வேலூர் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி, செயற்குழு உறுப்பினர்கள் என். காசிநாதன், எஸ்.டி. சங்கரி, அருள்சீனிவாசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.சந்திரன், எல்.சி.மணி, தா.வெங்கடேசன், திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், ஜி. நரசிம்மன், இந்துமதி, டாக்டர். ஜெயராமன் (புதுக்கோட்டை அ.பெ.கா. பண்பாட்டு மையம்) அழகிய பெரிவன், ராஜேஸ் வரி உள்ளிட்ட ஏராளமானவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

அறிவியல் இயக்கம்  இரங்கல்
தோழர் முகில் மறைவுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தலைவர்கள் பேரா. சோ.மோகனா, பொதுச் செயலாளர் அ.அமலராஜன் ஆகியோர் இரங்கல் தெரிவித்து விடுத்துள்ள அறிக்கை வருமாறு :-
‘முகில்’ என்றதும் எல்லோரது நினைவுக்கு ஓடி வருவதும் அவரின் கணீர் கம்பீரக் குரல் வளம் மிக்க பாடல்கள்தான். அறிவொளியின் துவக்க பாடலான “காலம் நம் கையில்தானே, எதிர்காலம் நம் கையில்தானே” பாடலை யாரும் மறக்க முடியாது?. கிராமத்து பரம்பரை பாடகர், முகில் என்ற பரமானந்தம் ஓர் அரிதான பன்முகத் தன்மை கொண்ட கலைஞர். அவரது சிறுகதைகள், நாவல், நாடகங்கள் மற்றும் பாடல்கள் எல்லாம் கிராமியத்தில் தோய்ந்தவை. எளிய வார்த்தைகளில் ஒடுக்கப்பட்ட மக்களின் பாடுகளை யும் தீர்வுகளையும் பற்றிப் பேசியவை.  முகில் பற்றி அறிந்த ஒவ்வொருவருக்கும் அவரை நினைத்தவுடன் ஒரு பாடல் மனதில் ஒலிக்கும். அவருக்கு முகவும் பிடித்தமான, அவரது உச்ச ஸ்தாயில் ஒலிக்கும் “ஏறாத மலைமேலே, ஏறாத மலைமேலே, உளுந்து காயப் போட்டிருந்தேன்” என்ற உள்ளுறைக் கருத்துமிக்க பாடல் இன்னும் காதில் ஒலித்துக்கொண்டே. அவரைப்பற்றி பகிர்ந்து கொள்ள ஒரு ஆழமான செய்தி ஒவ்வொருவருக்கும் இருக்கும்.  அவர் துவக்க காலத்தில் திருச்சி பெல் நிறுவனத்தில் பணிபுரிந்தார். பின் ராணிப்பேட்டைக்கு இடம் பெயர்ந்தார்.

முகில் சிறந்த கவிஞர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், நடிகர், பாடகர், அறிவொளி அகில இந்திய கலைக்குழு உருவான காலம் தொடங்கி அவரின் இறுதி மூச்சு உள்ளவரை தமிழ் நாடு அறிவியல் இயக்கத்திலும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்திலும் இணைந்து செயல்பட்டு வந்தார். முன்னோடி என்ற பன்முகத் தன்மை கொண்ட மாபெரும் ஆளுமை முகில். பாலின சமத்துவ பெண்மைக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் தன் கருத்தையும், குரலையும் ஒப்படைத்தவர்.  அறிவொளிக்காக வேலூர் மாவட்டத்தில் அதிகமாக 23 கலைக்குழுக்களை உருவாக்கிய மனிதநேயர்.. அத்தகைய பெரும் ஆளுமை ஜூன் 15 அன்று மாலை 5 மணிக்கு வேலூரில் திடீர் உடல் நலக்குறைவால் காலமானார்.  இது குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலத் தலைவர் பேராசிரியர் மோகனா, பொதுச் செயலாளர் ஏ. அமல்ராஜன், பொருளாளர் எஸ். சுப்பிரமணியம் ஆகி யோர் விடுத்திருக்கும் அறிக்கையில், முகிலின் மரணம் செய்ய முடியாத ஓர் பெரும் இழப்பு. அவருக்கு மாநில நிர்வாகக்குழு ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியைச் செலுத்து கிறது. முகில் அவர்கள் விட்டு சென்ற மக்களின் சமூகப் பணிகளை அறிவியல் இயக்கம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும். அறிவொளி காலத்தில் முகிலின் பங்களிப்பு அகில இந்திய அளவிலும் குறிப்பிடத்தக்கது. கலைப் பயணங்கள், அறிவொளி நாடகங்கள், அறிவொளி பாடல்கள் அதற்கான பயிற்சிகள் ஆகியவற்றில் பெரும்பங்கு ஆற்றினார். கவிஞர் முகில் அவர்களது பங்களிப்பு என்றென்றும் அறிவியல் இயக்கத்தின் வரலாற்றில் பதிக்கப்பட்டு நிலைத்து நிற்கும்.