tamilnadu

img

அவசரநிலைக் காலத்தில் இருந்ததைப்போல வெகுஜன முன்னணிகள் தேவை: சீத்தாராம் யெச்சூரி

அவசரநிலைக் காலத்திலிருந்ததைப்போல, வெகுஜன முன்னணிகள் இப்போது தேவை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுக் கூட்டம் கொல்கத்தாவில் வியாழன், வெள்ளி ஆகிய இரு நாட்கள் நடைபெற்றது. வெள்ளியன்று மாநிலக்குழுக் கூட்டத்தின் நிறைவாக சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:

எதிர்காலத்தில் நம் போராட்டம் என்பது ‘இந்து தேசியவாதத்திற்கும் இந்தியன் தேசியவாதத்திற்கும் இடையேயானதாகும்.’

இப்போது நம்முன் உள்ள அவசரக் கடமை என்பது அவசரநிலைக் காலத்தில் இருந்ததைப்போல,  “வெகுஜன மேடைகள்” (“mass platforms”) அமைப்பதாகும்.

இப்போது நமக்குத் தேவை உண்மையில்வ அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்வது என்பதல்ல. மாறாக நமக்கு இப்போது தேவை வெகுஜன மேடைகளாகும். அவசரநிலைக் காலங்களில் பல புகழ்பெற்ற நீதிபதிகள் போன்றோரால் தலைமை தாங்கியதுபோன்று குடிமை உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம் அல்லது ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம் (PUCL- People’s Union for Civil Liberties or PUDR- People’s Union for Democratic Rights) போன்று இப்போது அமைக்கப்பட வேண்டும்.

இன்றையதினம் நாட்டின் நிலைமை அவசரநிலைக் காலத்தில் இருந்ததைவிட மிகவும் மோசமானதாகும். அப்போது அரசமைப்புச்சட்டத்தின் மூலமாக அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்டது. இப்போது அரசமைப்புச் சட்டத்திற்கு அப்பாலிருந்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத அவசரநிலை இருந்துகொண்டிருக்கிறது.  

இந்தியாவில் இப்போது முழுமையான அளவில் உருமாற்றம் நடந்துகொண்டிருக்கிறது. அதாவது, இந்திய தேசியவாதம், இந்து தேசியவாதமாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதற்கெதிராக அனைத்துத்தரப்பினரையும் விரிவான அளவில் ஒன்றுதிரட்டி, மக்கள் இயக்கத்தைக் கட்டுவதற்கான பணியை இடதுசாரிகள் தொடங்கி இருக்கிறார்கள். இதற்காக இதர பிரிவினருடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூறாவது ஆண்டு துவக்க விழாக் கொண்டாட்டம் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது. விழாவிற்கு மக்கள் திரண்டெழுந்து வந்திருந்துது இதனைத் தெரிவிக்கிறது.

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார்.

(ந.நி.)