அரசு போக்குவரத்தை வலுப்படுத்த, போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளை குறைக்க, சுற்றுச்சூழலை பாதுகாக்க, “பொது போக்கு வரத்து மேம்பாடு” என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட சிறப்பு ஆய்வரங்கில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் நிர்வாகி சுந்தர்ராஜன் பேசிய தாவது: கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அங்குள்ள தேவாலயத்தின் வாசலில் 2 சவப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அதிலே அலேகே, அனேகா என்ற 2 சிறுமிகளின் சடலம் இருந்தது. அவர்கள் செய்த தவறு என்ன? அவர்கள் தனது 3 சகோதரர்கள் பெற்றோர்என 9பேருடன் குடும்பமாக வசித்து வந்தனர். திடீரென்று 3 மாதம் பெய்ய வேண்டிய மழை 3 மணி நேரத்தில் பெய்ததால் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு அந்த கிராமத்தில் இருந்த 40 வீடுகள் அடித்துச்செல்லப்பட்டன. அந்த குடும்பத்தில் இருந்த 3 பிள்ளைகளை அந்த குடும்பத்தினரும், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்கின்றனர். இந்த 2 சிறுமிகள் காணவில்லை. மறுநாள் சடலமாக மீட்கப்பட்டனர்.
வித்தியாசமான கட்டுப்பாடு
இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா வில் உள்ள கேப்டவுன் நகருக்குச் சென்றது. அந்நகர மேயர் இந்திய அணியின் மேலாளரை அழைத்து “ஒரு வீரர் 2 நிமிடங்களுக்கு மேல் குளிக்கக் கூடாது’’ என்கிறார். இதைக் கேட்ட மேலாளருக்கு அதிர்ச்சி. ஏனென்றால் “இந்தியாவில் கிரிக்கெட்தானே கடவுள், மதம். கிரிக்கெட்டை மதமாகவும், கிரிக்கெட் வீரர்களை கடவுளாக பார்க்கும் ஒரு தேசத்தில் இருந்து சென்ற கிரிக்கெட் வீரர்கள் 2 நிமிடம்தான் குளிக்க வேண்டுமா? ஏன் அப்படி கூறுகிறீர்கள்’’ என்று மேலாளர் கேட்டார். எங்கள் நகரத்தில் நீர் வழங்கக் கூடிய நீர் நிலைகள் வற்றத் தொடங்கி விட்டது. ஏப்ரல் எங்களுக்கு பூஞ்சியம் நாள். அன்றோடு தண்ணீர் முற்றிலுமாக வற்றி விடும். இருக்கின்ற 15 நாட்களுக்கு இருக்கும் தண்ணீரை எவ்வளவு சிக்கனமாக பயன்படுத்த முடியுமோ அவ்வளவு சிக்கன மாக பயன்படுத்த வேண்டியுள்ளது என்றார். சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்ட போது ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டு வந்தோ மோ அதைபோல் இன்றுவரை கேப்டவுன் நக ருக்கு ரயில் மூலமும், லாரி மூலமும் தண்ணீர் கொண்டு வரப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள டிபன்ஸ் காலனியில் இந்திய ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற மேஜர் வெங்கடேசனும் அவரது மனைவியும் வசித்துக் கொண்டிருந்த னர். 2015ஆம் ஆண்டு ஒரு மாதம் பெய்ய வேண்டிய மழை ஒரு நாள் இரவில் கொட்டித் தீர்க்கிறது. இதில் அந்த இருவரும் வீட்டில் இருந்து வெளியேற முடியாமல் பலியானார்கள். எல்லைகளில் எதிரிகளின் குண்டுகளில் போகாத உயிர் சென்னை வெள்ளத்தில் போகுமென்று அவர் நினைத்து பார்த்திருக்கமாட்டார். அந்த வெள்ளத்தில் ஏறக்குறைய 1000 பேர் உயிரிழந்தனர். ஆனால் கேரளாவில் 2018இல் 4 பேர் உயிரிழந்தனர்.
உலகில் மாசடைந்த நகரம் தில்லி
உலகில் கஜா, ஒக்கி, தானே, வர்தா புயல் ஒருபுறம், மறுபுறம் வறட்சி நிலவுகிறது. இதற்கு அடிப்படை காரணம் காலநிலை மாற்றம்தான். காலநிலை மாற்றம் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது பசுமை இல்ல வாயு வெளியேற்றம். உலகம் முழுவதும் போக்கு வரத்து துறை மூலம் இந்த வாயு 30 விழுக்காடு வெளியேற்றப்படுகிறது. உலகளவில் மாசடைந்த நகரம் பட்டியலில் இந்தியாவின் தில்லி நகரம் தொடர்ந்து 4ஆவது ஆண்டாக முதலிடத்தை பெற்று வருகிறது. இப்பட்டிப்பட்ட மோசமான காற்று மாசில் நாம் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறோம். உலகம் முழுவதும் காற்று மாசினால் ஒரு ஆண்டுக்கு 90 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள்.
குறைந்து வரும் ஆயுட் காலம்
வட இந்தியாவில் மாசு காற்றினால் ஒரு நபரின் ஆயுட்காலம் ஏழரை ஆண்டுகளும், தென் இந்தியாவில் ஒன்னரை முதல் 2 ஆண்டுகளும் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தனி நபர் வாகனங்கள் அதிகளவில் போக்கு வரத்திற்கு பயன்படுத்துவதுதான் இவை எல்லா வற்றிற்கும் காரணம். தமிழகத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளில் 13 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டன. 2020இல் 21 ஆயிரம் பேருந்து கள் இயக்கப்படுகின்றன. ஆனால் கார்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 46 ஆயிரத்தில் இருந்து 28 லட்சமாக அதிகரித்துள்ளது. இரண்டு சக்கர வாகனங்கள் 36 லட்சத்தில் இருந்து 2 கோடியே 50 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்த அளவிற்கு தனிநபர் வாகனங்களை பயன்படுத்தும் போது அதிலிருந்து வெளியேறும் கார்பன் அல்லது காற்றுமாசு மக்களுக்கு மிகப்பெரிய சிக்கல்களை உருவாக்கிக் கொண்டிருக்கின் றன. இதற்கு மாற்றாக எல்லோரும் எலெக்ட்ரிக் வாகனங்களில் செல்லலாமே என சிலர் கூறு கிறார்கள். உலகம் முழுவதும் சாலைகளில் செல்லக் கூடிய வாகனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்ற வேண்டும் என்றால் ஒட்டு மொத்த ஆப்பிரிக்கா கண்டத்தையும் அழிக்க வேண்டும். ஏனென்றால் அதற்கு தேவையான லித்தியமும், கனிமப் பொருட்களும் ஆப்பிரிக்கா வில்தான் கிடைக்கின்றன.
மேம்பாலம் அமைப்பதால் பயனில்லை
சுற்றுச்சூழலை பெரியளவில் மாசுபடுத்தாத பொது போக்குவரத்து முறைதான் சுற்றுச்சூழல் மாசுவுக்கு மாற்றாக இருக்க முடியும். சென்னை யில் இருந்து சேலத்திற்கு 3 மணி நேரத்தில் செல்வ தற்காக சாலை அமைக்கிறோம் என சர்வ சாதாரணமாக தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரி கூறுகிறார், 3 மணி நேரத்தில் அங்கு சென்று என்ன செய்யப்போகிறீர்கள்? ஒரு சாலை அமைக்க வேண்டும் என்றால் பல லட்சம் டன் கிராவல் மண் வீணாகிறது. பல லட்சம் லிட்டர் தார் உள்ளிட்ட உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்கள் தேவைப்படுகின்றன. இது ஒரு தவறான வளர்ச்சி திட்டம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதேபோல் மேம்பாலம் அமைக்கிறார்களே அந்த மேம்பாலம் ஒரு போக்குவரத்து முனையத்தில் ஏற்படும் போக்கு வரத்து நெரிசலை அடுத்த போக்குவரத்து முனையத்திற்கு தள்ளி விடுகிறது. உதாரணத்திற்கு வடபழனியில் மேம்பாலம் அமைத்தார்கள். அந்த போக்குவரத்து நெரிசல் லட்சுமணன் ஸ்ருதி சிக்னலில் தேங்கி நிற்கிறது அவ்வளவுதான். அதைத்தான் மேம்பாலங்கள் செய்கின்றனவே தவிர ஒரு எளிமை யான போக்குவரத்தை மேம்பாலங்கள் வழங்கு வதில்லை. மேம்பாலங்களும், சாலைகளும் வளர்ச்சியின் குறியீடுகள் என்பதை நமது எண்ண ஓட்டங்களில் இருந்து அகற்றிவிட வேண்டும்.
பொதுபோக்குவரத்து முதலீடு
பொது போக்குவரத்து துறையில் முதலீடு செய்யப்படும் ஒவ்வொரு யுரோவும், பொது சுகாதாரத்திற்கு தேவைப்படும் 7 யுரோவை சேமித்து தரும் என்பதை உணர்ந்து. லக்சம்பர்க் என்ற நாடு கடந்த ஆண்டு அனைத்து பொது போக்குவரத்துகளும் இலவசம் என அறிவித்து விட்டது. எனவே இன்றைய கால கட்டத்தில் பசுமையான பொது போக்கு வரத்திற்கு மாறுவதுதான் இந்த பிரச்சனை களுக்கு சரியான தீர்வாக அமையும். உலகம் முழுவதும் பொது போக்குவரத்திற்கு மாறு வதற்கு ஒரு வருடத்திற்கு 208 மில்லியன் டாலர் தேவைப்படும். ஆனால் அவை ஒவ்வொன்றும் 46 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இந்தியாவின் சூரத் நகரத்தில் 2014ஆம் ஆண்டு 87 விழுக்காட்டினர் தனிநபர் வாகனங்களைத்தான் பயன்படுத்தினார்கள். அங்கு பிஆர்டிசி என்ற முறையை அறிமுகப் படுத்தி 4 ரூபாயில் இருந்து 22 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளில் 87 விழுக்காட்டினர் பொது போக்குவரத்து முறைக்கு மாறிவிட்டனர். சென்னையில் 2006ஆம் ஆண்டிலிருந்து 2012ஆம் ஆண்டிற்குள் நுரையீரல் நோயால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சம். 2012இல் இருந்து 2018ஆம் ஆண்டிற்குள் அந்த எண்ணிக்கை 13 லட்சமாக அதிகரித்துள்ளது. தற்போது நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 15 லட்சம். இதற்கு முக்கிய காரணம் அதிகமான போக்குவரத்தும், காற்று மாசும்தான் என்று மருத்துவர்கள் திட்ட வட்டமாகத் தெரிவிக்கின்றனர்.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்
எப்போதும் நீங்கள் சுற்றுச்சூழல் பிரச்சனை குறித்து மட்டும் பேசுகிறீர்கள், வேறு பிரச்ச னைகள் இல்லையா என பலர் என்னிடம் கேட்பார்கள். அனைத்து பிரச்சனைகளும் முக்கியம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. மற்ற பிரச்சனைகளை காலங்கள் மாறும் போது, ஆட்சிகள் மாறும் போது தீர்வு காணலாம். ஆனால் சுற்றுச்சூழல் பிரச்சனையை பொறுத்தவரை வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என நினைத்தால், வந்தால் பார்ப்பதற்கு ஒன்றுமே இருக்காது. இந்த பூமி நம்முடைய தாத்தா பாட்டன் சொத்து கிடையாது என்பதை உணர்ந்து சுற்றுச்சூழலை பாதுகாப்போம், பொது போக்கு வரத்தை பலப்படுத்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.