கார்ப்பரேட் முதலாளியான அனில் அகர்வாலின் வேதாந்தா குழுமத்தின் கொள்ளைக்காக, அரிட்டாபட்டி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் வாழ்வாதாரம் மற்றும் இயற்கை வளங்களை அழித்து டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க முயற்சிக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும், சுரங்கத் திட்டத்தை ரத்து செய்யக் கோரியும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மூன்று நாள் நடைப்பயண பிரச்சார இயக்கத்தை துவங்கினர். அரிட்டாபட்டி மந்தையில் கிராம மக்கள் நூற்றுக்கணக்கானோரின் உற்சாக ஆதரவு மற்றும் வரவேற்புக்கு இடையே வெள்ளிக்கிழமை துவங்கிய நடைப்பயணத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும் கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நாகை மாலி, மதுரை மாநகராட்சி துணை மேயர் தி. நாகராஜன், திரைப்பட இயக்குநர் கௌதம் ராஜ் ஆகியோர் கொடியசைத்துத் துவக்கி வைத்தனர். அனைத்து கிராமங்களிலும் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது.