மதுரை, ஏப்.3- தமிழகத்தில் வேலம்மாள் குழும நிறுவனங்கள் நர்சரி பள்ளி தொடங்கி கல்லூரி வரை நடத்துகின்றனர். இந்த நிலையில், வேலம்மாள் எஜூகேஷனல் டிரஸ் என்ற பெயரில் நிறுவனத் தலைவரிடமிருந்து பணியாளர்களுக்கு "வாட்ஸ் அப்" தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அது பணியாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. "உலகையே உலுக்கும் கொரோனாவால் பொருளாதார ரீதியாக பாதிப்படைந்துள்ளதாகவும் அதனால் பணியாளர்கள் ஊதியத்தில் மார்ச் மாதம் முதல் 50 சதவீதம் குறைக்கப் போவதாகவும், வரும் காலங்களில் மொத்தமாகவோ அல்லது தவணை முறையிலோ வழங்கப்படும். இதற்கு பணியாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது பணியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் கொரோனா பாதிப்பால் தனியார் நிறுவனங்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டுமென்று அறிவித்துள்ள நிலையில் வேலம்மாள் நிறுவனத்தின் அறிவிப்பு பணியாளர்களை நிலைகுலையச் செய்துள்ளது. குழந்தைகளின் கல்விக் கட்டடணம், பள்ளி செல்வதற்கான இதர வசதிகளை பூர்த்தி செய்ய கூடுதல் பணம் தேவைப்படும் இந்த நேரத்தில் வேலம்மாள் நிறுவனம் 50 சதவீத ஊதியக்குறைப்பை அறிவித்துள்ளது.