மாநில மாநாட்டையொட்டி செந்தொண்டர் அணிவகுப்பிற்கான பயிற்சி மதுரை மாவட்டத்தில் இரண்டு மாதங்கள் நடைபெற்றது. செந்தொண்டர்களில் பள்ளி மாணவிகள் முதல் நாற்பது வயதிற்குட்பட்டோர் இடம் பெற்றிருந்தனர். அவர்களில் அக்க்ஷயா (13), பிரக்திஷா (10) இருவரும் மதுரையிலுள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்களில் பிரக்திஷா பள்ளியில் செய்திகளை அவ்வப்போது வாசிக்கிறார். இவர்களில் அக்க்ஷயா மருத்துவராக வேண்டும். பிரக்திஷா ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டுமென்ற விருப்பத்தை வெளிப்படுத்தினர், செந்தொண்டர் படைக்கு யார் அழைத்து வந்தது எனக் கேட்டதற்கு எங்களது உறவினர் ரகுராமன் என்றனர். பயிற்சி உங்களுக்கு எதைக் கற்றுக் கொடுத்துள்ளது எனக் கேட்டதற்கு தினம்தோறும் உடற்பயிற்சி, அதிகாலையில் எழுவது போன்ற பண்புகளை கற்றுக் கொடுத்துள்ளது. இந்தப் பயிற்சி எங்களுக்கு புத்துணர்ச்சி அளித்துள்ளது. கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவதற்கு உதவுகிறது என்றனர்.
மூன்று நாள் மாநாட்டில் பங்கேற்ற இளம் செந்தொண்டர் ஷர்மி. ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். “மெல்ஸ் எர்னஸ்டோ ஷர்மி” என்ற அவரது முழுப்பெயரை, மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகிய கம்யூனிஸ்ட் இயக்கப் பிதாமகர்களின் பெயர்களின் முதல் நான்கு எழுத்துக்களைச் சேர்த்து மெல்ஸ் என்றும், சேகுவேராவின் எர்னஸ்டோவை சேர்த்து மெல்ஸ் எர்னஸ்டோ ஷர்மி என பெயர் சூட்டி இருப்பதாக நம்மிடம் விளக்கியபோது பிரமிப்புதான் ஏற்பட்டது. சிவப்புச் சட்டையும், காக்கி பேண்ட்டும் அணிந்து ஒரு பெண் ராணுவ வீரராக மாறியது போன்ற உணர்வு ஏற்பட்டது. செந்தொண்டர் பேரணியில் இரண்டரை கி.மீ தூரம் நடந்து வந்த பிறகு பொதுக்கூட்ட மேடையின் முன்புறம் இரண்டு மணி நேரம் கால்கடுக்க நின்றதைக் கேட்டபோது எனக்கு அது ஒன்றும் கஷ்டமாகத் தெரியவில்லை. தீக்கதிர் நாளிதழ் பற்றி எனக்கு நன்கு தெரியும். தீக்கதிர் வாங்குகிறோம்.
குழந்தைகளுக்கு எனச் சிறப்புப் பக்ககமான வண்ணக்கதிர் வாராவாரம் வரும். அந்த பகுதியில், “காட்டில் திருந்திய குட்டி இளவரசன்”, “காட்டில் ஒரு துவக்கப்பள்ளி” உள்ளிட்ட மூன்று சிறுகதைகள் பிரசுரமானது. கதைகள் அருமையாக இருந்தது என்றார். மதுரை பைகாராவில் குடியிருக்கும் எட்டாம் வகுப்பு படிக்கும் ஜெயவர்த்தினி கூறும்போது செந்தொண்டராக இருக்கும்போது என்னை சேகுவேரா போல நினைத்துக் கொள்வேன். தில்லியில் கடந்த ஓராண்டாக நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் வெற்றி பெற்றது மகிழ்ச்சியளித்ததாகக் கூறினார். தொலைக்காட்சிகள், பத்திரிகைள் மூலம் இந்தச் செய்திகளை அறிந்து கொண்டோம். எந்த விஷயத்திலும் வெற்றியடைவதற்கு முயற்சியோடு இணைந்த போராட்டமும் அவசியம். அதற்கு இந்தப் போராட்டம் ஒரு உதாரணம் என்று எங்களது தந்தை கூறினர். அதை நாங்கள் தற்போது உள்வாங்கிக் கொண்டுள்ளோம் என்றனர்.