tamilnadu

img

இருதலைப் புள்ளின் ஓருயிர் - கு.மணி

 காதல் என்ற மூன்றெழுத்து மந்திரத்திற்கு அர்த்தம் என்னவென்று கேட்டால் இதற்குப் பதில் சொல்வது மிகவும்  கஷ்டம். இதற்கு ஒவ்வொருவரும் தங்களது  உணர்வுகளைப் பொறுத்துப் பதிலளிப்பார்கள். ஜொ்மனியைச் சோ்ந்த தத்துவஞானி வில்ஹெல்ம் நிட்சே என்பவர் காதல் குறித்து அழகான மேற்கோள்களைச் சொல்லி யுள்ளார். “ஒவ்வொரு காதலிலும் ஒரு பைத்திய காரத்தனம் இருக்கும். அப்போதுதான் அதைக் காதல் என்றே சொல்ல முடியும். ஆனால் பாருங்கள் அந்தப் பைத்தியகாரத்தனம் ஒவ்வொன்றிலும் ஒரு அழகான காரணமும் ஒளிந்திருக்கும். அதுதான் அந்தக் காதலை மேலும் அழகாகக்குகிறது.  சங்க இலக்கியங்களை அதன் பாடு பொருள் சார்ந்து அகம், புறம் என இரு வகை களாகப் பகுத்திருந்தனர் பழங்காலத் தமிழர்கள்.  இத்தகைய பகுப்புமுறைமை வேறு எந்த மொழியிலேயும் இல்லை என்றே சொல்லலாம். புலவர்கள் மிகவும் உற்சாகமாக காதலைப் பாடி  இருப்பதால் சங்க காலத்தில் காதலுக்கு நல்ல  வரவேற்பு இருந்தது தெரிகிறது. அதனால்தான் அகம் சார்ந்த பாடல்களே புறம் சார்ந்த பாடல் களைவிடவும் அதிகமாக இருக்கின்றன. எட்டுத்தொகை நுால்களுள் குறுந்தொகை, நற்றிணை, அகநானுாறு, ஐங்குறுநுாறு ஆகிய  ஐந்தும் அகம் பற்றியவை. பத்துப்பாட்டு நுால்களுள் முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை ஆகியவை அகநுால்கள் ஆகும். நெடுநல்வாடையை அகத்தில் சேர்ப்பதில்லை. அகம் என்பது உள்ளத்தே நிகழும், வெளியே புலப்படுத்த முடியாத உணர்வை, இன்பத்தைக் குறிப்பதாகும். அதாவது தலைவன் தலைவிய ரின் காதல் வாழ்வையும், மணவாழ்வையும் குறிப்பதாகும்.

“இம்மை மாறி மறுமையாகினும்
நீயாகி யரெம் கணவனை
யானாகியர்நின் நெஞ்சுநேர் பவளே”
என்கிறது ஒரு பாடல்...
“யாயும் ஞாயும் யாராகியரோ 
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சந் தாங் கலந்தனவே

காதல் வாழ்வில் அவனில் அவளும் அவளுள் அவனும் கலந்து கரைகின்ற தலைமையைக் காட்டும் குறுந்தொகைப் பாடல்கள் இவை. மழை என்ற தலைவனுக்காக நிலமங்கை காத்திருக்க, மழை வந்ததும் எங்ஙனம் அவற்றைப் பிரித்துப் பார்க்க முடியாதோ அது போல அன்புடைய நெஞ்சங்கள் ஒன்று கலந்தன வாம். இவ்வழகிய கருத்தைப் பாடிய கவிஞனின் பெயர் தெரியாததால் அவரது கவிதை வரியாலேயே அவர் செம்புலப்பெயல் நீரார் என்று அழைக்கப்படுகிறார்.

பிளவுபடாத பொருந்திய காதலில் ஓருயிர் ஈருடல் என்ற காதலர்களின் நிலையை 

“இரு தலைப் புள்ளின் ஓருயிரம்மே”
            (அகநானுாறு)
“நினக்கு யான்
உயிர் பகுத்தன்ன மாண்பினனே”
(நற்றிணை 128)
பாடல்கள் வழி அறிகின்றோம்.
பொய்யாமொழியாரோ காதல் பற்றிய தனது குறட்பாவில்
நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து
காதலனை நெஞ்சில் குடிவைத்திருக்கும் காதலி சூடாக எதையும் சாப்பிடுவதில்லையாம்.
குறுந்தொகையில் தேவகுலத்தார் என்னும் 
புலவர் காதலை எவ்வளவு அழகாக வடிவப்
படுத்திக் காட்டுகிறார் என்பதைப் பாருங்கள்.
நிலத்தினும் பெரிதே
வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆர் அளவன்றே - சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு
நாடனொடு நட்பே.
(குறுந்தொகை-3)
குறிஞ்சிப் பூக்களைக் கொண்டு மலைப் பகுதியில் பெரிய தேனை வண்டுகள் தொகுத்தற்கு இடனாகிய நாட்டையுடைய தலை வனோடு நான் கொண்ட நட்பு சொல்லப் புகுங்கால் நிலத்தை விட அகலமானது. நினை யப் புகுங்கால் வானத்தை விட உயரமானது. உள் புகுந்து எல்லை காணப் புகுங்கால் கடலைவிட ஆழமானது என்பதே இப்பாடலின் பொருள். இதில் காதல் நட்பு என்றே சுட்டப்படுகிறது. மனம், மொழி, மெய் என்ற மூன்றாலும் அளந்து காண இயலாத தன்மை புலப்படுத்தப்படுகிறது. நிலம், வான், நீர் இவை தனித்தனியே பயன்படாது. நிலத்திலிருந்து வானுக்கு நீர் செல்வதும், பின் அந்த நீர் மழையாகப் பொழி வதும் கடலில் சென்று கலப்பதும் இயற்கையாக இயைபுற்று அமைந்துள்ளது.  காதலனை நெடுங்காலம் பிரிந்திருக்கின் றாள் ஒரு தலைவி. அவள் திரும்பி வரும்  நாளை எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏங்கி மெலிந்து விடுகிறாள். காதலனைக் காணாமலேயே தன் இன்னுயிர் பிரிந்து விடுமோ என்று  அஞ்சுகிறாள். இந்த நிலையில் தலைவனைப் பிரிந்த தலைவி தன் ஆற்றாமையை தோழியிடம் நெஞ்சம் நெகிழ எடுத்துரைக்கின்றாள். “சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவேன் பிறப்புப் பிறிது ஆகுவதாயின் மறக்குவேன் கொல் என் காதலன் எனவே” தோழி! நான் சாவதற்கு அஞ்சவில்லை. ஆனால் வேறு ஒன்றிற்காக அஞ்சுகிறேன். நான் இறந்து விட்டால் பிறகு வேறு ஒரு பிறப்பும் பிறந்தால் அந்த மறுபிறப்பில் என் காதலனை மறந்து விடுவேனோ என்று நான் அஞ்சுகிறேன் என்று தலைவி கூறுவதாக நற்றிணைப் பாடல் வரிகள் விளக்குகின்றன. மலையும் மலை சார்ந்த இடமுமாகிய குறிஞ்சி நிலத்தில் உண்டான காதல் இது. ஒரு  பெண் காதலினால் படும் இன்ப வலியை அழகாக எடுத்துரைக்கின்றார் இந்தச் செய்யுளை இயற்றிய கபிலர்.

“வேரல் வேலி வேர்கோட் டலவின் சாரல் நாட செவ்வியை ஆகுமதி யார் அஃது அறிந்தினோரே சாரல் சிறு கெட்டுப் பெரும் பழம் தூங்கியாங்கு - இவள் உயிர் தவச் சிறிது காமமோ பெரிதே” ஒரு சிறிய கிளையில் பாரம் தாங்காமல் தொங்கும் பெரிய பலாப்பழம் போல, காதல்  வயப்பட்டு நிற்கும் இவளது காதல் மிகப் பெரி யது. ஆனால் அதைத் தாங்கும் அளவுக்கு அவள் உயிர் பெரியதாகத் தெரியவில்லை. அது மிகச் சிறியது. இந்த வேதனையும் விரக தாபத்தையும் யார்தான் அறிவார்களோ! வேர் பலாக்களுக்கு மூங்கில் வேலியிட்டுப் பாது காக்கும் மலை நாட்டின் தலைவனே என விளிக்கிறது. ஒரு பெண்ணுக்கு காதல் வந்துவிட்டால் முதலில் கெடுவதென்ன? தூக்கம்தானே! அப்படி காதல் வயப்பட்ட பெண்கள் தாங்கள் தூங்காது அடிச்சுப் போட்டது போல துாங்கும் ஊரைப் பார்த்து பொறாமைப்படுவதும், ஆத்திரப்படுவதும், காதல் வயப்பட்டு துாக்கம் தொலைந்து நின்ற உணர்வை பதுமனார் என்ற புலவர் இப்படிப் பாடுகின்றார். “நள்ளென்றன்றே, யாமம் சொல் அவித்து இனிது அடங்கினரே மாக்கள் முனிவு         இன்று நனந்தலை உலகமும் துஞ்சும் ஓர் யான் மற்ற துஞ்சாதேனே”

“காதல்” என்ற சொல் சங்க இலக்கியத்தில் எத்தனை இடங்களில் இடம் பெற்றுள்ளது என்ப தனை எண்ணி 89 இடங்களில் காதல் என்ற சொல் இடம் பெற்றுள்ளது என்ற கருத்தினை முனைவர் பெ.மாதையன் தெரிவித்துள்ளார். இந்த புள்ளிவிவரத்தைப் பார்த்தால் 21 பாடல்களுக்கு ஒருமுறை காதல் என்ற என்ற சொல் இடம் பெற்றுள்ளது. பெரும்பாலும் காதலுக்கு தடையாக இருந்தவை நிலம் சார்ந்த வேறுபாடுகளும், வரு வாய் சார்ந்த ஏற்றத்தாழ்வுகளும்தான். வயல்சார் வாழ்க்கையுடைய தன் மகளை ஒரு மலை  நாடனுக்கு மணம் முடித்து வைக்க அவள் தந்தை  விரும்புவதில்லை. காரணம் பொருளாதாரம் சார்ந்த ஏற்றத்தாழ்வு. இவையே இப்போதும் சாதி, மதம் என வேறு வடிவில் உள்ளன. இவை யெல்லாம் காதலை அழிக்க முடியவில்லை. காரணம் காதல் என்றும் அழிவதில்லை. “ஆசைக் காதலைக் கொட்டி     வாழ்த்துவோம்,” காதலினால் மானிடர்க்குக்      கலவியுண்டாம்.....     ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே! அஃதன்றோ இவ்வுலகத் தலைமையின்பம்” காதல் வாழி! என்கிறார் மகாகவி பாரதி.