tamilnadu

img

தொழில் வளர்ச்சியில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாட்டை நிலைநிறுத்த வேண்டும்

சென்னை, ஜூன் 19 - சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் 16-வது சர்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சி தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, தமிழ்நாட்டின் தொழில்துறை சாதனைகளை விரிவாக எடுத்துரைத்தார்.

தொழில்துறை சாதனைகள்

பிரான்ஸ் நாட்டு யுஎப்ஐ கூட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட இந்த கண்காட்சியில் கடந்தாண்டு 435 நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில், இந்த ஆண்டு 468 நிறுவனங்கள் பங்கெடுத்துள்ளன. இது உலக நிறுவனங்கள் தமிழ்நாட்டின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடு என்று கூறிய முதலமைச்சர், 35 லட்சத்திற்கும் மேற்பட்ட பதிவுசெய்யப்பட்ட சிறு, குறு நிறுவனங்களில் இந்திய அளவில் மூன்றாவது இடத்தில் உள்ள தமிழ்நாட்டில் இந்த நிறுவனங்கள் மூலம் 2 கோடியே 47 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப் பட்டுள்ளது. 14 புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றார். இந்தியாவின் உற்பத்தித்துறை சார்ந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 11.90 விழுக்காடு ஆகும். மோட்டார் வாகன உற்பத்தி, ஆயத்த ஆடைகள் மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. ஜவுளி, இயந்திரங்கள் மற்றும் மின்னணு பொருட்கள் உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் உள்ளது. பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு தமிழ்நாட்டில் தொழில்முனைவோரில் பெண்களின் பங்கு 30 விழுக்காடு ஆகும். இந்தியாவில் உள்ள 14 இலட்சத்து 90 ஆயிரம் பதிவு செய்யப்பட்ட பெண் தொழிலாளர்களில் 6 இலட்சத்து 30 ஆயிரம் பேர், அதாவது 42 விழுக்காடு பெண்கள் தமிழ்நாட்டு தொழிற்சாலைகளில் பணிபுரிகின்றனர்.

ஏற்றுமதியில் சாதனை

2024-25 ஆம் ஆண்டில் 30.50 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு ஏற்றுமதி செய்து இந்திய அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது தமிழ்நாடு. ஏற்றுமதியில் முதல் நான்கு மாநிலங்களில் 2021-22 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து ஏற்றுமதி மதிப்பு அதிகரித்து வரும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்.  இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.