“துணி” என்ற முதல்கதை; ஷேப்பிங் மெஷினின் சூடான பிசிர்கள் காலில் கையில் விழுந்து மூன்றாம் பிறையாய் அரை வட்ட நிலவாய் கருப்பு தழும்புகள் உண்டான அனுபவமும், பேண்ட், சட்டை ஆங்காங்கு பொத்த லான அனுபவமும் நான் தொழி லாளியாய் வேலைபார்த்த நாட்களை என்னுள் படமாய் விரித்தது. கமலாலயனும் என்னைப் போல் ‘டூல் அண்ட் டை மேக்கராய்’ வேலை செய்தவராயிற்றே. சூடு பட்ட அனுபவமே கதையாய் விரிந்துள்ளது . பொதுவாய் கமலாலயன் மென்மையானவர். அவர் குரல் மட்டுமல்ல எழுத்தும் அப்படித்தான். ஆனால் பார்வை அழுத்தமானது; புதிய மானுடத்தைக் கருக் கொண்டது.இந்நூலின் 15 கதை களுமே அப்படித்தான் .இக்கதைகள் நான் ஏற்கெனவே படித்தவைதான். ஆயினும் இப்போது வாசிக்கும் போதும் நெஞ்சில் ஓர் சிலிர்ப்பை உருவாக்குகிறது . போராட்டக் களமும் சிறையும் எப்படி ஒருவனின் மனதில் அப்பிக் கிடந்த பயத்தையும் சுயநலத்தை யும் துடைத்தெறிகிறது என்பதை இயல்பாய்ச் சொல்லும் “பார்வைகள் மாறும்” கதை.
தாயும் பிள்ளையுமாயினும் வாயும் வயிறும் வேறு வேறு என்பது போல், கணவனும் மனைவியும் ஆயினும் ரசனையும் சுயமும் வேறு வேறு ஆனால் அதை மிதித்து துவைக்கும் ஆணாதிக்கம். இதை மென்மையாக ஆனால் வலுவாகச் சொல்லும் “ரசனை” . சொந்த உழைப்பை நம்பி பிழைக்க மல்லுக்கட்டும் மனிதர் களின் வலியை ஒரு சிறு பட்டறை யாளன் ஒரு வேன் டிரைவர் மூலம் மனதில் பதியம் போட்டுவிட்ட “துணைகள்”. காக்கை குருவி எங்கள் ஜாதி என பாடுபவரல்ல வாழும் மனிதர் களாய்,”குருவி குஞ்சுகளும் கலைந்த கூடுகளும்” கதையும் “குருவி” கதையும் இடம் பெற்றுள் ளன. இப்படி ஒவ்வொரு கதை யும் வாழ்வின் அன்றாட பாடுகளி லிருந்து முளைத்தவையாய் இருப்பதும், அதே சமயம் வாழ்வை புதிய கோணத்தில் தரிசிக்க வைப்பதாக அமைந்திருப்ப தும்தான் சிறப்பு. 44 தாழ்த்தப்பட்ட விவசாயக் கூலிகள் உயிரோடு கொழுத்தப்பட்ட கீழ் வெண்மணியின் துயரமும் கோபமும் கொப்பளிக்கும் சரித்தி ரத்தை ஒரு பத்திரிகை செய்தியாளர் மூலம் காலங்கடந்து நிற்கும் அழியா சித்திரமாய் படைத்து தந்திருக்கிறார் “தணியாத் தீயின் நாக்குகள்” கதையில் கமலாலயன். இந்த ஒரு கதை போதும் இந்த நூல் சாகாவரத்தை பெற.
இன்னொரு வரலாற்றுக் கதையும் இதே போல் அமைந்து விட்டது. “ மடிகேரியின் கண்ணீர்”. கவுரம்மா என்ற எழுத்தாளரின் கதை. 1936களிலேயே பெண்ணியம் பேசிய, சுயமாய் உலாவந்த, நீச்சல், டென்னீஸ் என ஆற்றலைக் காட்டிய ஓர் இளம் பெண்ணின் மரணத்தில் படிந்த ஆணாதிக்கத்தை read between lines என்பது போல் வரிகளுக்கு இடையே வலுவாய் உணர்த்திய பாங்கு மிகச்சிறப்பு. இக்கதை மிகவும் வலுவானது. நூல் நெடுக பெண்ணியப் பார்வை மிக நுட்பமாய் ஓங்கி ஒலிக்கிறது. கடைசி கதை, “ஒரு மாலைநேரத்து மயக்கம்” இதன் உயிர் சாட்சி என்றே சொல்லலாம்.ஓர் ஆணும் பெண்ணும் நண்பர் களாகப் பழகும் போது ஏற்படும் சில மனச்சறுக்கல்களை இருவரும் சரியாய் புரிந்து தவறுகளைக் களைந்து நட்பைப் தொடரும் பக்கு வமே நட்பின் வேர். அன்பு என்பது கண்டிக்கவும் அரவணைக்கவும் வழிநடத்தவும் மிகப்பெரும் ஆயுத மாகுமே ! “பறப்பவர்களின் காலம்” “பற்றிக்கொள்ள” என்கிற இரண்டு கதைகளும் அன்றாட நம் பய ணத்தில் நாம் கடந்து போகிற காட்சிகள்தாம். ஆனால் கமலாலயனின் இளகிய மனதில் அவை புதிய கோணத்தில் காட்சியாய் விரிந்துள்ளது. அதுபோல் இதர நான்கு கதைகளும் கூட நம்முள் மென்மையாய் வாழ்வின் பன்முகங்களை பதிய வைக்கிறது .
எனக்கு போனஸாக இந்து தமிழ் தீபாவளி மலரில் வெளிவந்த “ ஒரு துளிக் காற்று” சிறுகதையையும் அனுப்பி இருந்தார் .அக்கதை அமெரிக்காவில் கழுத்தை மிதித்து நசுக்கும் வெள்ளை அதிகார பூட்ஸுக்கு எதிராக கறுப்பர்களின் குரல் ஓங்கி ஒலித்ததில் தொடங்கி, ஆஸ்த்மா நோயாளிகளின் வேதனையை துல்லியமாய் சொல்லி, மூச்சுத்திணறலை நம்மையும் உணரவைத்துவிட்டார் . இந்த சிறுகதைத் தொகுப்பை வாங்கி வாசிப்பீர் ! வாழ்வின் வலி களூடே புதிய மானுட அறத்தைப் பேண ஒரு பற்றுக்கோடு அகப்படும்! இராமாயணத்தை, மகா பாரதத்தை திரும்பத் திரும்ப பல்வேறு கோணங்களில் எழுதிக் குவித்துக் கொண்டே இருக்கிறார் கள். இந்த பண்பாட்டுத் திணிப்புக்கு எதிராய் நாம் நம் இரட்டைக் காப்பி யங்களான சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் திரும்பத் திரும்ப பல்வேறு கோணங்களில் எழுத வேண்டாமா ? வந்தவை சிலவே. அவை போதாது. கமலா லயன் சென்ற வருடமே மணிமேக லையை மறுவாசிப்பு செய்து ஓர் நாவல் எழுதத் தொடங்கியதை நான் அறிவேன். வரும் ஆண்டி லாவது அந்த நாவல் அச்சேறச் செய்வாராக ! இது என் வேண்டு கோள் மட்டுமல்ல; அன்புக் கட்டளையும் கூட.
தணியாத் தீயின் நாக்குகள்,
(சிறுகதைத் தொகுப்பு) ஆசிரியர் : கமலாலயன், வெளியீடு: பரிசல் புத்தகநிலையம்,
தொடர்புக்கு : 9382853646 /8825767500
மின்னஞ்சல் : parisalbooks2021@gmail.com
பக்கங்கள்: 156,
விலை :ரூ.160