tamilnadu

ஆன்லைன் சூதாட்டத்துக்கு விரைவில் முற்றுப்புள்ளி: மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை, ஜன.6- ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  உறுதியளித்தார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக உறுப்பினர் வைத்திலிங்கம், “ கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,500,  கல்விக் கடன் ரத்து, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம், சமையல் எரிவாயுக்கு ரூ.100 மானியம், முதியோர் உவித் தொகை ரூ,1500 ஆக உயர்த்தப்படும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000  உதவித் தொகை என்றெல்லாம் தி.மு.க. அரசு தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததை சுட்டிக்காட்டி அதனை எப்போது நிறைவேற்றப் போகிறீர்கள் என கேள்வி எழுப்பினார். தொடர்ந்துபேசிய அவர், தற்போது தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் தற்கொலை செய்து வருகிறார்கள். வங்கி அதிகாரி  ஒருவர் குடும்பத்தோடு தற்கொலை செய்துள்ளார். அதனை தடுப்பதற்கும்,  ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கும் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?

என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசுகையில்,“ கடந்த அதிமுக அரசு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை  விதித்த நிலையில் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில் தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் மீண்டும்  ஆன்லைன் சூதாட்டம் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளது. இதனால்  பலரும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடத் தொடங்கி லட்சக்கணக்கில் பணம், நகை ஆகியவற்றை இழந்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக 2 தற்கொலைகளும், ஒரு  கொள்ளையும் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தடுத்து நிறுத்தவேண்டுமென பல்வேறு அரசியல் தலைவர்களும் தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனர். எனவே, ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்” என்றார்.