tamilnadu

img

எளிமையும் வலிமையும் என்றென்றும் வழிகாட்டும்

மாணவப் பருவத்திலேயே விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர் தோழர் ஏ.நல்லசிவன். வெள்ளையராட்சியில் தொடுக்கப்பட்ட நெல்லைச் சதி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனை பெற்றவர். ஒன்றாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சியிலும் பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் தீவிரமாகப் பணியாற்றியவர். தொழிற்சங்கப்பணிகளில் ஏஐடியுசி-பின்னர் சிஐடியுவில் பல்வேறு பொறுப்புகளில் செயல்பட்டவர். கம்யூனிஸ்ட் இயக்கம் தடைசெய்யப்பட்ட காலங்களில் சிறைவாழ்க்கையும் தலை மறைவு வாழ்க்கையும் நடத்தியவர். ஜில்லா போர்டு உறுப்பினர், சட்ட மேலவை உறுப்பினர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக திறம்படச் செயல்புரிந்தவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக, மத்தியக்குழு, அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகச் செயல்பட்டவர். தீக்கதிர் நாளிதழ், மார்க்சிஸ்ட் மாத இதழ் வெளியீட்டாளராக விளங்கியவர். வாச்சாத்திக் கொடுமைக்கு நீதி கேட்டு உச்ச நீதிமன்றம் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க உறுதுணையாக இருந்தவர். ஆதாரப்பூர்வமாகவும் அறிவுப்பூர்வமாகவும் எளிமையாகவும் வலிமையாகவும் வாதிடும் திறமை கொண்டவர். சீனா, கியூபா, வடகொரியா நாடுகளுக்குப் பயணம் செய்து அந்நாடுகள் பற்றி தமிழக மக்கள் தெரிந்து கொள்ள சிறு நூல்கள் எழுதியவர். தமிழில் தந்தி கொண்டு வரக்காரணமாக அமைந்தவர். பொதுவுடமை லட்சியத்தை உயிர் மூச்சாய்க் கொண்டு கடைசி வரைவாழ்ந்தவர். தொண்டால் பொழுதளந்த தோழர் ஏ.நல்லசிவன் என்றென்றும் மக்கள் மனங்களில் நிறைந்திருப்பார்.