tamilnadu

img

தோழர் ஆர்.குமாரராஜா குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதி வழங்கல்

தோழர் ஆர்.குமாரராஜா குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதி வழங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டக் குழு முன்னாள் உறுப்பினரும், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவருமான தோழர் ஆர்.குமாரராஜாவின் குடும்ப நிதியாக ரூ.2 லட்சம் கோட்டூர் ஒன்றியம் இருள்நீக்கி கிராமத்தில் அவரது குடும்பத்தாரிடம் வழங்கப்பட்டது.   தோழர் ஆர்.குமாரராஜா நீடித்த உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சைப் பலனின்றி கடந்த 18.9.2024 அன்று காலமானார். தோழர் ஆர்.குமாரராஜா மாணவர் பருவம் முதல், மாணவர்-வாலிபர் அரங்கங்களில் பல பொறுப்புகளில் திறம்பட செயலாற்றிய ஆளுமை மிக்க தோழர் ஆவார். தனது இனிமையான குரலால் இயக்கப் பாடல்களை ஏராளமான மேடைகளில் பாடி வந்தார்.  அவரது துணைவியார் செங்கொடி குமாரராஜா, சாராய சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தியாகி ஜே.நாவலன் மகளாவார். கட்சி உறுப்பினரான செங்கொடி, தற்போது கோட்டூர் ஒன்றியம் இருள்நீக்கி ஊராட்சியின் தலைவராக உள்ளார். அவரது குடும்பத்திற்கு நிதி திரட்டி உதவுவது என திருவாரூர் மாவட்டக் குழு முடிவு செய்திருந்தது.  அந்த வகையில் மாவட்டம் முழுவதும் திரட்டப்பட்ட நிதி ரூ. 2 லட்சத்தை 13.4.2025 அன்று, இருள்நீக்கி கிராமத்திற்குச் சென்று அவரது குடும்பத்தாரிடம் மாவட்டக் குழுவின் சார்பாக, கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில் தோழர் ஆர்.குமாரராஜாவின் துணைவியார் செங்கொடி குமாரராஜா, கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.முருகையன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.கந்தசாமி, சி.ஜோதிபாசு, கே.என்.முருகானந்தம், கே.தமிழ்மணி, கே.பி. ஜோதிபாசு, ஒன்றியச் செயலாளர் கே.கோவிந்தராஜ், முத்துப்பேட்டை ஒன்றியச் செயலாளர் பழனிச்சாமி, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பி.கோமதி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.