அக்டோபர் 2022 இல் அமைக்கப்பட்ட முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் குழுவின் இரண்டு ஆண்டு கால வரையறை அக்டோபர் 2024 உடன் முடிவடைகிறது. ஆனால் இந்த ஆணையம் கால நீட்டிப்பு கேட்கும் என செய்திகள் தெரிவிக்கின்றன. காரணம், இரண்டு ஆண்டுகளாகியும் ஆணையத்திற்கான போதுமான ஊழியர்களை அரசு வழங்கவில்லை என்பதே. ஆனால் ஊழியர்கள் வேண்டும் என்று கேட்டு விண்ணப்பம் ஏதும் ஆணையத்திடமிருந்து வரவில்லை என்று அரசு கூறுகிறது. ஆணையத்தின் நோக்கம் குறித்தே சிறுபான்மை தலித் மக்களுக்கு சந்தேகம் இருக்கிறது. ஏற்கனவே சச்சார் குழுவும், ரங்கநாத் மிஸ்ரா குழுவும் போதுமான தரவுகளை தந்திருக்கும் போது எதற்காக புதிய குழு என்ற கேள்வி துவக்கத்திலேயே எழுந்தது. உச்ச நீதிமன்றம் ஒரு கட்டத்தில் ஏற்கனவே உள்ள தரவுகளின் அடிப்படையில் தன் முன்பு உள்ள வழக்கினை அணுக ஆரம்பிக்கும் என்ற நிலை ஏற்பட்ட போது தான் புதிய குழுவை அமைப்பதாக அரசு அறிவித்தது என்பது சந்தேகங்களை வலுப்படுத்துகிற விஷயமாகும். 20 ஆண்டுகளாக இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. பட்டியல் சாதிகளாக ஏற்கெனவே உள்ள மக்களுக்கும், சிறுபான்மை தலித்துகளுக்கும் இடையே முரண்பாடுகளை உருவாக்குவதே நோக்கம் என்ற சந்தேகம் ஆழமாக உள்ளது. கள ஆய்வுகளை இந்த குழு செய்து கொண்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன. கேரளா, குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பொது விசாரணைகள் நடந்தேறி உள்ளன. இன்னும் பீகார், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பொது விசாரணைகளை நடத்த உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.