பயன்பாட்டில் இல்லாத நிழற்குடையை இடித்து அப்புறப்படுத்த வேண்டுகோள்
பாபநாசம், ஏப்.19- அய்யம்பேட்டை - கணபதி அக்ரஹாரம் முக்கியச் சாலையில் அய்யம்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட மாகாளிபுரத்தில், சாலையையொட்டி பழுதடைந்த நிலையில், எந்நேரமும் இடியும் நிலையில் பயணியர் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடை, மக்கள் பயன்பாட்டில் இல்லை. இந்த நிழற் குடை அருகிலும், முன்புறமும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. மக்கள் பயன்பாட்டில் இல்லாத இந்த நிழற்குடையை இடித்து அகற்ற அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், இந்த நிழற்குடை விரிசல் விட்டு, பழுதடைந்த நிலையில், வெயில், மழைக்குக் கூட ஒதுங்க முடியாத நிலையில் உள்ளது. இந்த நிழற்குடையை பழுது பார்ப்பது தேவையற்றது. எனவே, அதனை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.