போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை விரைந்து முடித்திடுக!
சிஐடியு, ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை, ஏப்.21- போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான 15 ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை விரைந்து முடிக்க வலியுறுத்தி, சிஐடியு, ஏஐடியுசி ஓய்வு பெற்றோர் சங்கங்களின் சார்பில், புதுக்கோட்டையில் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக் கழக மண்டலத் தலைவர் கே. கார்த்திகேயன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு மாவட்டப் பொருளாளர் எஸ். பாலசுப்பிரமணியன் மற்றும் சிஐடியு சங்க நிர்வாகிகள் எஸ்.சாமிஅய்யா, எம்.முத்துக்குமார், பி.செந்தில்நாதன், இராமசாமி, அண்ணாத்துரை, ஏஐடியுசி நிர்வாகிகள் டி.எம். கணேசன், பி. மணிவண்ணன், ராஜா, கே.நாராயணன் உள்ளிட்டோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் போக்கு வரத்துத் தொழிலாளர்களுக்கான 15 ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை விரைந்து பேசி முடிக்க வேண்டும். 1.4.2003-க்குப் பிறகு பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.