மதுரையில் விலையில்லா மடிக்கணினி வழங்க கோரி போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் மாணவ-மாணவிகள் பயனடைந்தனர்.ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக மடிக்கணினி வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில வாரமாக மடிக்கணினி வழங்கக்கோரி மாநிலம் முழுவதும் மாணவ-மாணவிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் இன்றும் மாணவ-மாணவிகள் இலவச மடிக்கணினி கோரி மறியல் போராட்டம் நடத்தினர். மதுரை புட்டுதோப்பு மங்கையர்கரசி மேல்நிலைப்பள்ளி மற்றும் பல்வேறு பள்ளிகளில் கடந்த ஆண்டு படித்த நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் மதுரை எம்.ஜி.ஆர். பஸ் நிலையம் முன்பு திரண்டனர்.
அவர்கள் திடீரெனபிரதான சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அண்ணாநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. திடீரென போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்த முயன்றதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து காவல்துறை இந்திய மாணவர் சங்கத்தின் மதுரை மாநகர மாவட்டச் செயலாளரை கடுமையாக தாக்கி உள்ளது. மேலும் வேல்தேவா, சார்லஸ் உள்ளிட்ட 10 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற இந்திய மாணவர் சங்கம் வற்புறுத்தி உள்ளது.