பிஎஸ்என்எல் தொலைத் தொடர்புத்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஓய்வூதியப் பலன் நிறுத்தி வைப்பு
மன்னார்குடி, ஜுன் 2- மகாராஷ்டிரா மாநில தொலைத்தொடர்பு வட்டத்தில் விருப்ப ஓய்வில் சென்ற 170 பிஎஸ்என்எல் ஊழியர்களின் ஓய்வூதிய பலன்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக பிஎஸ்என்எல் மற்றும் தொலைத்தொடர்பு துறையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பட்டியலின மற்றும் பழங்குடியினர் சான்றிதழ்களை மறு ஆய்வு செய்ய வேண்டும் என அடாவடித்தனமாகக் கூறி, சமூக நீதிக்கெதிரான அராஜகம் நடைபெற்று வருகிறது. இதனைக் கண்டித்து, தஞ்சை தொலைதொடர்பு மாவட்ட பிஎஸ்என்எல் ஊழியர் சங்கமும், அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கமும் இணைந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பி. பக்கிரிசாமி தலைமை ஏற்றார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மன்னார்குடி கிளைச் செயலாளர் எஸ். சிவராஜன், ஓய்வூதியர் சங்க துணைத் தலைவர் கே.ஆர். பாஸ்கர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் கே. பிச்சைக்கண்ணு விளக்கவுரையாற்றினார். அரசு மருந்தாளுநர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் வீ. கோவிந்தராஜ், சிஐடியு தலைவர் கே. சிவசுப்பிரமணியன், கே. கல்பனா, விவசாயிகள் சங்க நகரப் பொருளாளர் ஜி. மாரிமுத்து ஆகியோர் போராட்டத்தை வாழ்த்திப் பேசினர். பி. கோபி நன்றி கூறினார்.