மயிலாடுதுறை, அக்.2- மாறிக் கொண்டே இருக்கும் நவீன காலத்தில் இயற்கையின் மீதான அக்கறையிலிருந்து மக்கள் விலகிக் கொண்டே இருக்கின்றனர். குறிப்பாக ரசாயனம் மூலம் விளைவிக்கக் கூடிய உணவுப் பொருட்களை உட்கொள்வதால் உணவே மருந்தாக இருந்த காலம் மாறி, தற்போது உணவே விஷமாக மாறிவிட்டது. என்னதான், இயற்கையான தானியங்கள், பண்டங்களை தேடித் தேடி பார்த்தாலும் இயற்கையானது என்று சொல்லி பல இடங்களில் போலியானவற்றைதான் விற்பனை செய்கின்றனர். ஆனால் முழுக்க, முழுக்க இயற்கையான முறையில் அரிசி உள்ளிட்ட உணவு தானியங்கள், தின்பண்டங்கள், நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் என அனைத்துப் பொருட்களும் இயற்கையாக விளைவிக்கப்பட்டு, எந்தவித ரசாயனமும் கலக்காமல், தானே ஊழியராகவும், உரிமையாளராகவும் செயல்படுகிறார் இயற்கை விவசாயி மாப்படுகை அ.ராமலிங்கம். மயிலாடுதுறை அருகில் கல்லணை-பூம்புகார் மெயின்ரோட்டில் யாழ் மரச்செக்கு ஆலை மற்றும் இயற்கை உணவுப்பொருள் அங்காடிக்கு நேரில் சென்று பார்வையிட்ட போது அவர் கூறியது...
எங்கள் வீட்டை ஒட்டியுள்ள நிலத்திலேயே இயற்கை உரம் மட்டுமே போட்டு விளைவிக்கப்பட்ட அரிசி, காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றைத்தான் உணவுக்காக பயன்படுத்துகிறோம். ஒவ்வொருவரும் நாம் சாப்பிடும் உணவை நாமே இயற்கையாக பயிரிட்டு சாப்பிட்டாலே, இயற்கை உணவுப்பொருட்கள் மீதான ஈடுபாடு அதிகரிக்கும். மக்களிடம் இயற்கை உணவுப்பொருட்கள் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்தவே இயற்கை உணவுப்பொருள் அங்காடியை நிறுவி இருக்கிறோம். எங்களிடம் 10-க்கும் மேற்பட்ட பாரம்பரிய அரிசி வகைகள், 4 வகை அவல், நெய், தேன், கடலை மிட்டாய், பிஸ்கட், மிளகு கடலை மிட்டாய், சுக்கு கடலை மிட்டாய், மால்ட் மாவு மற்றும் மிளகு, சீரகம் என எல்லாமே இயற்கையாக விளைவிக்கப்பட்ட பொருட்களையும், இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டவற்றையும் விற்பனை செய்கிறோம். அதே போன்று இயற்கை செக்கு ஆலை மூலமாக இயற்கையான எண்ணெய் வகைகளை மட்டுமே விற்பனை செய்கிறோம்.
இதை ஒரு தொழிலாக, பணம் ஈட்டுவதற்காக செய்யவில்லை. மக்களிடம் இயற்கை உணவுப்பொருட்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே செய்கிறோம் என்றார். மேலும் 25 வகையான அழிந்துவரும் நாட்டு இன மாடுகளை வளர்த்து வருவதாகவும், அவற்றிலிருந்து பாலை கறக்காமல் கன்று குட்டிகளுக்கு மட்டுமே பாலூட்ட வைப்பதாகவும் கூறி ஆச்சரியமூட்டுகிறார். இயற்கையை நேசித்து எந்தவித ரசாயனக் கலப்படமும் இல்லாமல் உணவுப்பொருட்களை மக்களிடம் கொண்டு செல்வதோடு, அழிந்துவரும் நாட்டு இன மாடுகளை வளர்த்து வரும் இயற்கை விவசாயி அ.இராமலிங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினராக இருப்பதோடு, பொதுவுடைமை இயக்கத்தின் அனைத்து போராட்டங்களிலும் முன்னின்று போராடக் கூடியவர். இயற்கையை நேசித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முயலும் மாப்படுகை அ.இராமலிங்கத்தின் செயல்பாடுகள் கவனிக்கத்தக்கவை மற்றும் பின்பற்றவும் கூடியவை. செ.ஜான்சன்