tamilnadu

img

பாட்டுக்கோட்டையாய் பட்டுக்கோட்டை -

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே செங்கப்படுத்தான்காடு கிராமத்தில் பிறந்த பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், இளம் வயதிலேயே கவிதை எழுதும் திறன் பெற்றிருந்தார். கம்யூனிஸ்ட் இயக்கத்துடன் இணைந்து பணியாற்றினார். 1954ல் திண்டுக்கல்லில் நடந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநாட்டில் அரங்கேறிய நாடகத்திற்கு பாடல்கள் எழுதினார். பாவேந்தர் பாரதிதாசனை சந்தித்து அவரது பாடல்களை எழுதும் பணியையும் மேற்கொண்டார். 1955ல் “மகேஸ்வரி” திரைப்படத்தில் முதன்முதலாக அவரது பாடல்கள் இடம்பெற்றன. “பாசவலை” படம் அவருக்குப் புகழ் சேர்த்தது. 57 திரைப்படங்களுக்கு 182 பாடல்கள் எழுதியுள்ளார். எளிமையான மொழியில் பொதுவுடைமைக் கருத்துக்களையும், சமூக மாற்றக் கருத்துக்களையும் தன் பாடல்களில் வெளிப்படுத்தினார். விவசாயிகளின் வாழ்க்கை, உழைப்பின் மேன்மை, மூடநம்பிக்கைகள், பெண்களின் நிலை, அரசியல்வாதிகளின் போலி வாக்குறுதிகள் போன்றவற்றை தன் பாடல்களில் பதிவு செய்தார். 29 வயதிலேயே காலமான போதிலும், அவரது பாடல்கள் மக்கள் நெஞ்சில் நிலைத்து நிற்கின்றன. எம்.ஜி.ஆர். படங்களில் பொதுவுடைமைக் கருத்துக்கள் இடம்பெற காரணமாக இருந்தார். “கலை மக்களுக்குச் சொந்தமானது” என்ற லெனினின் கூற்றுக்கு ஏற்ப படைப்புகளை வழங்கியவர் பட்டுக்கோட்டையார்.