லதா மங்கேஷ்கரின் சமகாலத்தவரும் திரையிசைப்பாடல்கள் துறையில் அவருக்கு இணையாக புகழ்பெற்றவருமான முகம்மது ரஃபியுடன் இணைந்து பாடிய திரைப்பட ஜோடிப்பாடல்கள் திரையிசைப்பாடல் பிரியர்களின் மனதைக் குளிரச்செய்திருந்தது. ஆனால் லதாவின் நிலைபாடுகள் விரிசலுக்கு வழிவகுத்தது. தயாரிப்பாளர்கள் இசையமைப்பாளர்களுக்கு வழங்கும் ஐந்து சதவீத ராயல்டி தொகை பாடகர்களுக்குச் சேரவேண்டியதாகும் என்று கூறி லதா மங்கேஷ்கரின் தலைமையில் பின்னணி பாடகர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார்கள். ஆனால் முகம்மது ரஃபி இதில் உடன்பாடில்லை என்று கூறி விலகிநின்றார். பாடகர்களுக்கு உரிய சம்பளம் கிடைக்கிறதென்றும் ராயல்டி கேட்பது வட்டி வாங்குவது போன்றதாகுமென்றும் அது நம்பிக்கைக்கு உகந்ததல்ல என்பதும் அவருடைய நிலைபாடாக இருந்தது. 1961ஆம் ஆண்டு ’மாயா’ வில் ’தஸ்வீர் தேரி தில் மேம்’ என்ற ஜோடிப் பாடலின் ஆலாபனையின் போது இருவருக்குமிடையேயான விரோதம் வெளிப்படையாகிப்போனது. மென்மையும் மிக நேர்த்தியும் மிகுந்த லதாவின் குரல் உச்சஸ்தாயியில் போகும்போது முகம்மது ரஃபியின் உச்சரிப்புத் தெளிவு ஒத்துப்போகவில்லை என இயக்குனர் புகார் செய்தார். ஆனால் இவ்வாறு தெரிவித்ததின் பின்னணியில் ரஃபிதான் உள்ளார் என லதா கருதினார். இனி நாம் இணைந்து பாடுவதில்லை என்ற அறிவிப்பை பாடல் பதிவுக்கூடத்திலேயே லதா அறிவித்தார். லதா மங்கேஷ்கரின் உறுதியான நிலைபாடுகளும் சுதந்திரமான சில நடவடிக்கைளும் அவருக்கு பல எதிரிகளை உருவாக்கியது.
1962ஆம் ஆண்டு வீட்டில் அருந்திய உணவால் ஏற்பட்ட உடல்நலப் பாதிப்பால் தொடர்ந்து மூன்று நாட்கள் மருத்துவமனையில் மரணத்தோடு போராடினார். அவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு வீட்டுவேலைக்காரி சம்பளம்கூட வாங்காமல் தலைமறைவாகிப்போனார். அந்த வேலைக்காரி பாலிவுட்டின் பல பிரபலங்களின் வீட்டு வேலைக்காரியாகவும் இருந்ததினால் பலர் மீதும் சந்தேகக்கோடு பரவியது. அடுத்த ஆறுமாத காலம் பிரபல கவிஞர் மஜ்ரூக் சுல்த்தான்பூரி வீட்டிற்குவந்து இரவு உணவை ருசிபார்த்தபின்பே லதா மங்கேஷ்கருக்கு கொடுத்தனர். நிச்சயமற்ற தன்மை நிலவிய அந்தக்காலத்தில் இந்தி சினிமாத் துறை இரண்டு பிரிவுகளாகப் பிரிந்தது. மங்கேஷ்கரின் ரசிகர்களான தயாரிப்பாளர்கள் முகம்மது ரஃபியைப் போலவே பாடக்கூடிய மகேந்திரக் கபூரை களத்தில் இறக்கினார்கள். அதேபோல் ரஃபியின் ஆதரவாளர்கள் லதாவின் குரல்தான் என நினைக்கத்தோன்றும் சுமன் கல்யாண்பூரை பாடவைத்தனர். லதா மங்கேஷ்ர், முகம்மது ரஃபி இருவரையும் மீண்டும் இணைந்து பாடவைப்பதற்கு சங்கர்- ஜெய்கிஷன் ஆகியோரில் ஜெய்கிஷன் பெரும் முயற்சி மேற்கொண்டார். அவ்வாறாக 1967 ஆம் ஆண்டு ’ஜுவல் தீப்’ (நகைத்திருடன்) என்ற திரைப்படத்தில் ’தில் புகாரே ஆரே ஆரே ஆரே’ என்ற பாடலின் மூலம் ரஃபி-லதா ஜோடிப் பாடல் யுகம் மீண்டும் பிறவியெடுத்தது.
இந்தியாவின் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர்களான யாஷ் சோப்ரா பிலிம்ஸாரின் அனைத்துப் படங்களும் லதா மங்கேஷ்கரின் பாடல்களோடு மட்டுமே வெளிவந்துள்ளன. 1960 முதல் 1970 வரை லதா மங்கேஷ்கரின் குரல்வளத்தைப் பயன்படுத்திக் கொண்டவர்களில் முக்கியமானவர்கள் ஸி.ராமச்சந்திரா, எஸ்.டி.பர்மன், சங்கர்- ஜெய்கிஷன், மதன் மோஹர், ஜெய்தேவ் ஆகியோர் ஆவர். இவர்களோடு லட்சுமிகாந்த்- பியாரிலாலும் உள்படுவர். 35 வருடங்களுக்குள்ளாக பியாரிலாலின் 700 பாடல்களுக்கு லதா குரல் கொடுத்துள்ளார் என அறியும்போது அந்தக் கூட்டணி குறித்த வியப்பு மேலோங்குகிறது. 1970 ஆம் ஆண்டுகளில் தனது முதல் இசையமைப்பாளரின் வாரிசுகளின் இசைக்கும் மங்கேஷ்கர் குரல் கொடுத்துள்ளார். ரோஷனின் புதல்வர் ராஜேஷ் ரோஷன், சர்தார் மாலிக்கின் மகன் அனு மாலிக், சித்ர குப்தனின் வாரிசு ஆனந்த் மிலிந்த் ஆகியோர் துவங்கி புதிய இசையமைப்பாளர்களான ஜதின் லலித், நதீம் ஸ்ராவன், திலீப் சென், உத்தம்சிங் ஆகியோரின் இசையிலும் லதா மங்கேஷ்கர் பாடியுள்ளார். எஸ்.டி.பர்மனின் மகன் ஆர்.டி.பர்மன் லதாவின் குரலைப் பயன்படுத்தியதில் இவர்களையெல்லாம் முந்திக் கொண்டவர். சங்கீதத் துறையில் தனது எதிரியும் சகோதரியுமான ஆஷா போஸ்லேயின் கணவர் ஆர்.டி.பர்மனின் இசையில் பாடுவதை மங்கேஷ்கர் பெருமையாகக் கருதினார். ஆர்.டி.பர்மன் இசையமைத்த முதல் பாடலையும் கடைசிப்பாடலையும் பாடும் வாய்ப்பு லதா மங்கேஷ்கருக்கே கிடைத்தது.